காதல் கொன்று ராகம் தின்பவள்..




மனம் கலைத்துக்களைந்த மனிதர்களால்
அரங்கம் நிரம்பியிருக்கிறது,
தானே செய்த இசைக்கருவியொன்றை
கையில் எந்தியிருக்கிறாள் அவள்
இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த
இசைக்கருவியில் என்
மூளையிலிருந்து இதயத்திற்கு வரும்
நரம்புகளை மட்டும் தனியாய்
பிரித்தெடுத்து நேர்த்தியாய்
வரிந்து கட்டியிருக்கிறாள்,
நரம்புகளை மீட்ட
விரலிடுக்குகளில்
என் நாவின் நுனியை
இதய வடிவில்
கத்தரித்து கவ்வியிருருக்கிறாள்,
கூச்சலும் குழப்பமுமாய்
குழுமியிருந்த அரங்கம்
உயிர் பிரியும் வேளையில் தோன்றும்
அமைதியை போல்
மௌனம் கொள்கிறது
அவள் இசைக்கருவியை கையிலேந்தி
வாசிக்க துவங்குகிறாள்
ஒரு சில துளிகளுடன்
மௌனமாய் ஆரம்பித்து
அதிகம் நீளாமல் ஆர்ப்பரித்து அடங்கும்
பெருமழையை போல ஒலிக்க ஆரம்பிக்கிறது
இசை என்ற பெயரில்
என் அலறல் சத்தம்,
அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி
அமைதியாய் அரங்கின் ஓரமாய்
கிடக்கிறது அவள்
முன்னெச்சரிக்கையாய் பறித்தெடுத்த
என் இதயம்
கூடவே துணையாய்
என் காதலும்.