Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

சமகால கல்வி முறை ஒரு பார்வை...!

அன்னைக்கும், தந்தைக்கும் பின் நாம் மதிப்பது கல்வி கற்று கொடுக்கும் குருவை தான். ஆனால் அந்த குருக்கள் மிதிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர். இன்று கல்வி நிலையங்களில் தான் பல அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன. ஆசிரியர் மாணவியர்களிடம் முறை கேடாக நடந்து கொண்டார் என்றும், மாணவிகள் தற்கொலை என்றும் வாரத்திற்க்கொருமுறை செய்தி தாள்களில் வருமளவிற்கு வந்து விட்டது நிலை. மேலும் மாணவ மாணவியரை அடித்து துன்புறுத்துவது, தகாத வார்த்தைகளாலும் காயப்படுத்துவது மட்டுமல்லாமல் படிக்க வரும் மாணவ மாணவியரைக் கொண்டு பள்ளிக்கூடத்திலுள்ள வேலைகளை செய்ய வைப்பது போன்ற பல கொடுமைகள் நடந்து வருகின்றன. இப்பொழுது இதற்கும் ஒரு படி மேல் சென்று தன்னிடம் பயிலும் மாணவ மாணவியரை கொண்டு தங்கள் வீட்டு வேலைகளை செய்ய வைக்குமளவிற்கு முன்னேறி இருக்கின்றனர் பல ஆசிரியர்கள். பிள்ளைகள் பெற்றோர்களிடம் இருக்கும் நேரத்தை விட ஆசிரியர்கள் கவனிப்பில் இருக்கும் நேரம் தான் அதிகம், பெற்றோர்களுக்கு சமமாக மதிக்கப்படும் ஆசிரியர் பெருந்தகைகள் இப்படி தவறு செய்தால் பெற்றோர்கள் எந்த தைரியத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள் ?.

இது போன்ற காரணங்களால் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்க விரும்பினாலும் அவர்களால் முடிவதில்லை. காரணம் பணம். அங்கே பணம் தான் தான் பிரதானம். இன்றைய சூழலில் ஒரு சாமானியன் தன் குழந்தையை தனியார் பள்ளியில் சேர்ப்பது என்பது அவனுக்கு பகல் கனவு தான்.. அப்படியே எப்பாடு பட்டாவது சேர்த்துவிட்டாலும் மாதா மாதம் அதற்கு இதற்கு என்று காரணமே இல்லாமல் வசூலித்துவிடுவார்கள். மேலும் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வேண்டுமானால் தாயும் தந்தையும் கட்டாயம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அப்படிஎன்றால் தன் குழந்தைக்கு நல்ல கல்வி கொடுத்து எப்படியாவது பெரிய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என நினைக்கும் ஏழை பெற்றோர்களின் நிலை ?. இது போன்ற பல காரணங்களால்படிப்பு என்பது ஏழைக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க படிக்கும் பிஞ்சுகளின் நிலையோ இன்னும் மோசமானது. வீட்டில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என பாசங்களின் அரவணைப்பில் இருக்க வேண்டிய குழந்தைகளை இரண்டரை வயதிலையே பள்ளியில் சேர்த்துவிடுகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அந்த பிஞ்சுகளை விடுமுறை நாட்க்களில் கூட நிம்மதியாக விளையாட விடாமல் பாட்டு, டான்ஸ், ஸ்போர்ட்ஸ் என பிழிந்து எடுத்து விடுகிறார்கள். இவற்றை முழு மனதோடு கற்றுகொள்ளும் அளவிற்கு அந்த குழந்தைகள் பக்குவபட்டிருக்க மாட்டார்கள். அந்த குழந்தைகளை பார்க்கவே பாவமாக இருக்கும். அவர்களின் மழலை பேச்சும், செய்யும் குறும்பும் இதை விட்டால் எப்போது நம்மால் ரசிக்க முடியும். ஆகையால் பெற்றோர்களே குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள்.


இன்றைய பெரும்பாலான படிப்புகள் வெறும் சான்றிதழ்கள் எனும் காகிதங்களுகாக மட்டும் தான் நம் கையில் உள்ளது. மாணவர்களும் ஏதாவது படித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் தான் படிக்கின்றனர். அப்படியே படித்தாலும் அவர்கள் அந்த படிப்பு சமந்தப்பட்ட வேலையில் தான் இருக்கிறார்களா என்றால் 90 % இல்லை என்று தான் கூற முடியும்.. உதாரணத்திற்கு நான் பணிபுரியும் நிறுவனத்தில் MSC computer science படித்த நண்பர் ஒருவர் செய்யும் வேலை Data Entry. இன்னொருவர் படித்தததோ Teacher Training ஆனால் அவர் செய்வதோ Welding வேலை. இது போன்று தான் படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் சம்மந்தமே இல்லாமல் ஓன்று ரெண்டல்ல எண்ணி சொல்ல முடியாத அளவிற்கு நம்மவர்கள் மகிழ்ச்சியை விற்று, குடும்பம் மறந்து வெளிநாடுகளில் உள்ளனர். காரணம் படித்த படிப்பிற்கு சொந்த நாட்டில் மதிப்பில்லை, அதற்க்குண்டான வேலை வாய்ப்புகளும் இல்லை. அப்படியே ஏதாவது வேலைகள் கிடைத்தாலும் அதற்குரிய ஊதியம் கிடைப்பதில்லை. ஒருவர் 10000/- ரூபாய்க்கு வேலை செய்ய தயாராக இருந்தால் இன்னொருவர் 8000/- ரூபாய்க்கு தயார், வேறொருவர் 5000/- ரூபாய்க்கு வேலை செய்யவும் தயாராக இருக்கிறார். படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது வேலைவாய்ப்புகள் இல்லாமல் போகிறது. படித்த படிப்பிற்கு மதிப்பும் கிடைப்பதில்லை. இது போன்ற காரணங்களால் எந்த வேலையானாலும் சரி என்று வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள் பலர்..

இந்தியாவின் தென் கோடியிலுள்ள கன்னியாகுமரியை அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. கல்விக்கு பஞ்சமில்லாத ஒரு மாவட்டம். அங்குள்ள கல்வி நிறுவனங்களை எளிதில் எண்ணி கூறமுடியாது. அந்த அளவிற்கு ஒவ்வொரு வருடமும் அதிகமாகி கொண்டே தான் செல்கிறது, அங்கே இல்லாத துறைகளே இல்லை எனலாம். நானறிந்து அங்கே இல்லாதது Marine சமந்தப்பட்ட படிப்புகள் மட்டுமே. அது போன்றே அங்குள்ள 90% பேர் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருப்பார்கள் ஆனால் இவர்களில் ஒரு சிலரை தவிர எவரும் படிப்பிற்குரிய வேலையை எதிபார்ப்பது கூட இல்லை. படித்த படிப்பு ஒருபக்கம் இருக்கட்டும் என்று சொந்தமாக ஏதாவது தொழில் தொடக்கி விடுவார்கள், பெரும்பாலானோருக்கு படித்து வாங்கிய பட்டங்கள் பெயருக்கு பின்னால் போட்டு அழகு பார்ப்பதற்கே பயன்படுகிறது. சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் "ஏன் BE யோடு நிறுத்தி விட்டாய் ME சேர்ந்திருக்கலாமே" என்று கேட்டதற்கு அவர் "எப்படியும் இந்த படிப்பை கொண்டு நான் எந்த வேலைக்கும் போகப்போறதில்லை கல்யாணம் செய்வதற்கு இந்தபடிப்பு போதுமானது" என்று கூறினார். இது தான் இன்றைய உண்மை நிலையும் கூட. பட்டம் வாங்குவது திருமணம் என்ற பெயரில் அதிகமாக வரதட்சணை வாங்குவதற்கும், சுய மதிப்பிற்க்காகவும் மற்றும் வேறு சில லாபங்களுக்காகவும் என்பது தான் வேடிக்கை.

இன்றைய இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எப்போதும் பிரச்சனைக்குரிய விசயமாக இருப்பது ஜாதி மத பிரச்சனைகள் தான். "ஜாதி இரண்டொழிய வேறில்லை என்ற பாரதியின் வாக்கை பொய்யாக்கிவிட்டு" எங்கும், எதிலும் ஜாதி மதம் என்ற நிலையை கொண்டுவந்துவிட்டார்கள் நம் நாட்டு அரசியல்வாதிகள். இது போன்ற ஜாதி மத பிரச்சனைகளுக்கு அடிக்கல் நாட்டுமிடம் சில பள்ளிகளும் கல்லூரிகளும் தான். ஒவ்வொரு ஜாதி மதத்தினருக்கும் தனித் தனி பள்ளி கல்லூரிகள் இருக்கின்றன. இது போன்ற கல்வி நிறுவனங்களில் அந்தந்த ஜாதி மதத்தினருக்கு தான் முன்னுரிமை அளிக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் ஒரு சில ஆசிரியர்கள் மாணவ, மாணவியரின் உள்ளத்தில் சிறு வயதுகளிலேயே ஜாதி மத உணர்வுகளை விதைத்து விடுகிறார்கள். மேலும் கல்லூரிகளில் மாணவர்கள் ஜாதி மத பேதமின்றி ஒற்றுமையாக இருந்தாலும் கல்லூரி நிர்வாகிகள் அவர்களுக்கிடையில் வேற்றுமைகளை விதைப்பதுண்டு. (இது போன்றொரு சம்பவம் நான் பயின்ற கல்லூரியில் நடந்தது.) இது போதாதென்று ஜாதிகளே வேண்டாம் எனும் அரசாங்கமே ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டது. இந்தியாவில் ஏற்ப்படும் பல ஜாதிக் கலவரங்களுக்கு மறைமுகமாக அரசாங்கமும், ஆசிரியர்களும் தான் காரணமாக இருக்கின்றனர்.




மனிதம்..

கலைந்த கேசம், பொட்டில்லா நெற்றி, செருப்பில்லா கால்கள், அழுக்கான உடைகள், களையிழந்த முகத்துடன் வந்து கொண்டிருந்த அந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் தள்ளாடிய நடை என் கண்களை விட்டு அகலவில்லை,

அடிவயிற்றில் ஒரு கைவைத்து மறுகையால் ஆதரவிற்காக சுவற்றில் பிடித்துக்கொண்டு மெதுவாய் வந்து கொண்டிருந்தாள்.

கண்கள் உள்வாங்கியிருந்தன, அந்த பெண் சாப்பிட்டு இரண்டு நாட்க்களுக்கு மேலிருக்கும் என்பதை அவள் முகமும், சோர்ந்து போன நடையும் கூறியன.

மெதுவாய் 20 அடி தூரம் தான் நடந்து வந்திருப்பாள் அப்பெண், அதற்கு மேல் அவளால் நடக்க முடியவில்லை, அங்கேயே அமர்ந்தவள் சிறிது நேரத்தில் அடிவயிற்றில் கைவைத்துக்கொண்டு கீழே படுத்தவள் வலியால் துடித்துக்கொண்டிருந்தாள்.

அனைவரின் கையிலும் ஆறாம் விரல் போல அலைபேசிகள் இருந்தும் அமைதியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களில் நானும் ஒருவன்..

நாகரீகம் கலாச்சாரம் என அனைத்தும் வளர்ச்சியின் உச்சிக்கு போனாலும் வேடிக்கை பார்க்கும் விசயத்தில் எங்களுக்கு ஆறறிவில் ஓன்று குறைவு தான் என்பதை போல கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டம் சேர ஆரம்பித்தது. அந்த பெண்ணை சுற்றி அனைவரும் நின்று வேடிக்கை பார்த்தார்களே தவிர எவரும் முன்வரவில்லை.. அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்..

கடைவீதியில் அத்தனை பெரும் பார்த்துக்கொண்டிருக்க யார் உதவியும் இல்லாமல் சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

கண்திறந்து பார்க்கவும், வாய்திறந்து பேசவும் முடியாமல் படுத்துக்கிடந்தவள் செய்கையால் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டாள். ஆனால் அருகிலிருந்த ஆண்கள், பெண்கள், இளையவர், முதியவர் என அனைவரும் எதோ விளம்பர படம் பார்ப்பது போன்று வேடிக்கை பர்த்துக்கொண்டிருந்தார்களே தவிர எவரும் உதவ முன்வரவில்லை.

சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து விட்டாள் அப்பெண். ரத்த வாடை காற்றில் பரவத்தொடங்கியது. ஈக்கள் மொய்க்க ஆரம்பித்தன.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆறறிவு கொண்ட சொறிநாய்கள் கூட்டத்தில் நானும் ஒருவனாய் நின்று கொண்டிருக்க, ரத்த வாடையை மோப்பம் பிடித்த படி வரத்துவங்கின ஐந்தறிவு கொண்ட தெரு நாய்கள்.

அதற்கு மேல் அங்கு நிற்க திராணியில்லாமல் நடக்க துவங்கினேன் அக்கூட்டத்தை விட்டு..

**************************

இங்கே சொல்லியிருக்கும் நான் என்பது நானல்ல... இது கற்பனைக்காக எழுதியதும் அல்ல. ஓரிரு மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் ஒரு மக்கள் நெருக்கம் அதிகமுள்ள ஒரு கடைத்தெருவில் நடந்த சம்பவம் இது..

**************************