Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

என் இனிய தீபாவளி

நினைவு தெரிந்த நாளிலிருந்து வருடந்தோறும் தீபாவளி தன் இயல்பு மாறாமல் வந்து போய்க் கொண்டே தானிருக்கிறது, நான் தான் பட்டாசுகள், பலகாரங்கள், புத்தாடைகள், புதுப்படங்கள், நண்பர்களுடனான கும்மாளங்கள், குடும்பத்தினருடனான கொண்டாட்டங்கள் என ஒவ்வொரு பருவத்திலும் ஏதாவது ஒன்றிற்கான தேடல்களுடனும், ஏக்கத்துடனும் ஒரு பார்வையாளனாகவே ஒவ்வொரு வருடமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இப்போதென்னிடம் எல்லாம் இருந்தும், எப்போதும் போலவே இப்போதும் கொண்டாடி மகிழ இயலாமல் அனைத்திலிருந்தும் தூரமாய் தனிமையில் நான் இருப்பதால் இம்முறை உன்னை சற்றே பெரிய ஏக்கத்துடன் அனுப்பி வைக்கிறேன். அடுத்த முறை உன்னை என் குடும்பத்துடன் சந்திக்கிறேன் இப்போது சென்று வா என் இனிய தீபாவளியே. :)

தொலைத்தும் தொலையா "இரவு"

April-02-2015


எல்லா இரவுகளைப்போலவும் இவ்விரவை என்னால் எளிதில் கடந்துவிட முடியுமென்று தோன்றவில்லை. கடந்த நான்கு வருடங்களாக உறக்கம் தொலைத்த இரவாகவே இருந்து வரும் இவ்விரவு இனியுள்ள காலங்களும் அவ்வாறே தொடரலாம். 

வருடந்தோறும் முயற்சிக்கிறேன்  எங்கனமேனும் இவ்விரவின் கருமையில் அவ்விரவு  நினைவுகளின் கரம் பற்றாமல் கடந்துவிட வேண்டுமென்று,

அவளெழுதிய கவிதைகளோ, அவளால் நான் எழுதிய கிறுக்கல்களோ எப்படியாவது கண்ணில் பட்டு விரதம் கலைத்து விடுகின்றன.

வெறும் கரும்போர்வையுடுத்திய  இவ்விரவைப்பற்றி  எழுதவோ சிலாகிக்கவோ என்ன  இருக்கிறதென்று பலமுறை யோசித்ததுண்டு அவ்விரவை நான் நானல்லாது கடக்கும் வரை

இரவு என்பது தொடக்கம் 
இரவு என்பது முடிவிலி
இரவு என்பது தொடர்ச்சி
இரவு என்பது துன்பம்  
இரவு என்பது இன்பம் 
இரவு என்பது இழப்பு
இரவு என்பது கொலைக்களம்
இரவு என்பது காமக்காடு 
இரவு என்பது காதல்
இரவு என்பது நல்ல ஆசான் 
இரவு என்பது வலி
இரவு என்பது துரோகம்

என்னை முதன்முதலில் தற்க்கொலைக்கு தூண்டியதும், 
என் முகம் தாடிக்கு பொருத்தமாக ஆரம்பித்ததும் 
காதலை தொலத்ததும் 
காதல் களைந்து எழுத ஆரம்பித்ததும் 
கடைசிக்கவிதைகள் ஆரம்பமானதும் 
கடைசியாய் சிரித்ததும் 
கண்ணீர் ஒழித்து வைத்து அழுததும்

என்று இரவு என்னில் எல்லாமுமாய் நின்றது அவ்விரவிலிருந்து தான். 

இவ்வொரிரவை கடப்பதென்பது எனக்கு அவ்வளவு எளிதான காரியமல்ல, நாட்களைக் கொன்று  தின்றபடி வருடங்கள் பல நகர்ந்தாலும் வருடந்தோறும் இவ்விரவின் மூர்க்க குணம் மட்டும் மாறாமல் அப்படியே இருப்பது தான் கொஞ்சம் கலக்கமூட்டுகிறது.

இன்னுமென்ன இருக்கிறது இவ்விரவைப்பற்றியெழுத, இதற்கு மேலும் இதனைத்தொடர்ந்தால் தற்கொலை எண்ணத்தை  தூசு தட்ட வேண்டுமென்பதைத் தவிர....

பால்யகால கிரிக்கெட்


உங்களுக்கு எப்படியென்று தெரியவில்லை,  இது வரையில் நான் பார்த்த எந்த திரைப்படமும் என்னில எந்த மாற்றத்தையும் உருவாக்கியதில்லை இனி மேல் உருவாக்கப்போவதுமில்லை. திரைப்படங்கள் என்னைப் பொறுத்தவரையில் பொழுதுபோக்கிற்கான ஒரு அம்சமே தவிர வேறொன்றுமில்லை.மாறாக பல படங்கள் மனதில் அடி ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் நினைவுக்குப்பைகளை கிளறி விட்டு செல்வதுண்டு. சில காதல் படங்கள் மற்றும் பள்ளி கல்லூரி சம்மந்தப்பட்ட படங்கள் நம் மனதை விட்டு அகன்று விடுவதில்லை, அதற்கு பள்ளி கல்லூரிகளில் நாம் செய்த சேட்டைகளையும், காதலால் நாம் அனுபவித்த இன்ப துன்பங்களையும் பிரதிபலிப்பதும் தான் காரணமாக இருக்கும். இவ்வாறு நம்மை கவரும் சில படங்களை பார்க்கும் போது ஐயோ இந்த வாழ்வை தவற விட்டு விட்டோமே என்று வருத்தப்பட  வைப்பதுண்டு, பல படங்கள் நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டுமொருமுறை செல்ல மாட்டோமா என்று எங்க வைக்கவும் செய்யும். அவ்வாறு மனதின் நினைவுக்குப்பைளை கிளறிவிட்டு மீண்டுமொருமுறை வந்து செல்லாதா  அது போன்றொரு பொற்காலம் என்று தோன்ற வைத்தாது சமீபத்தில் பார்த்த 1983 என்ற மலையாள படம். 


கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் 1983 படம். கிரிக்கெட் மீதுள்ள  ஆர்வத்தால் தன படிப்பு, காதல் என  எல்லாவற்றையும் தொலைத்தவன் தன மகன் மூலம் கனவுகளை நனவாக்க முயற்சிப்பது போன்று வடிவமைக்கப்பட்ட படம். சொல்ல வந்த விசயங்களை தெளிவாக ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்லிவிட்டு கூடவே நம்மையும் கடந்த காலத்திற்குள் நாமறியாமல் நகர்த்திவிட்டு சென்று விடுகிறார்கள். படத்தில் இன்னொரு முக்கியமான அம்சம் பாத்திர தேர்வுகள். படத்தில் நடித்தவர்கள் அனைவரையும் நீங்கள்  சந்தித்திருக்கலாம்  ஒரு காலத்தில நீங்களும் ஒரு கிரிக்கெட் பைத்தியமாக கிரிக்கெட் பேட்டும் சைக்கிளுமாக சுற்றி திரிந்தவர்களாக இருந்திருந்தால்.

 
நாங்கள் 96 களில் தென்னை மட்டை மற்றும் பிளாஸ்டிக் பந்துகள் வைத்து வீட்டு காம்பவுண்ட் சுவர் அல்லது மரத்தில ஸ்டம்ப்ஸ் வரைந்து ஆரம்பித்த கிரிக்கெட்  எங்கள் வீட்டு முற்றங்களை  தாண்டியதில்லை. இன்று நம்மை ஆக்கிரமித்திருக்கும் அதிநவீன பொழுது போக்கு அம்சங்கள் எதுவும் அப்போது இல்லாத காரணத்தால் விளையாட்டு வீரர்களுக்கு பஞ்சமே இருக்காது. விடுமுறை நாட்கள் என்றால்  நாங்களே ராஜாக்கள் நாங்களே மந்திரிகள், 98-களின் துவக்கத்தில் தான் நாங்கள் முற்றைத்தை விட்டு காலியிடங்கள் தேடி புறப்பட ஆரம்பித்தோம். இந்த காலகட்டத்தில் தான் அதுவரை பாடங்களில் அண்டை நாடாக நாங்கள் அறிந்திருந்த பாகிஸ்தான் எங்களுக்கும் எதிரி நாடாக மாற்றியது.   

எங்கு நோக்கினும் பச்சை பசேலென மரங்கள் படர்ந்திருக்கும் எங்கள்  ஊரில் விளையாடுவதற்கு ஏற்ற காலியிடங்களை தேடிப்பிடிப்பதென்பது சாதாரண விஷயமில்லை. ஒரு பிட்ச் வைக்குமளவிற்கு இடம் கிடைத்தாலே அந்த இடத்தில் கூடாரம் அமைத்து விடுவோம். ஆள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் சிறிய இடங்கள் வசப்பட்டாலும்   ஒன்  பிச் கேட்ச், சிக்ஸ் அடித்தால் அவுட் என்று இட வசதிக்கேற்ப விளையாட்டை வடிவமைப்போம். விடுமுறை நாட்களில் விளையாடுபவர்களின் எண்ணிக்கையும், நேரமும் அதிகமாக இருப்பதால் இது போன்ற சிறிய இடங்களை காலி செய்து வேறு இடம் தேட ஆரம்பித்து விடுவோம்.வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் போர்க்களமும் அதற்க்கு தகுந்தாற்போல இருந்தால் தானே நன்றாக இருக்கும். 


 
இந்த இடம் தான்  என்று இல்லாமல் வயல், வற்றிப்போன குளம், தென்னந்தோப்புகள், கோவில் மைதானங்கள், மயான பூமிகள்  என எல்லா இடங்களிலும் எங்கள் ராஜ்ஜியம் நடக்கும். பெரும்பாலும் நாங்கள் விரும்பி தேர்ந்தெடுப்பது எளிதில் யாரும் சொந்தம் கொண்டாட வராத வகையில் ஏதாவது பிரச்னையால் ஸ்டே ஆர்டர் வாங்கப்பட்டிருக்கும் நிலங்ககளாகத் தான் இருக்கும். யாருடனாவது பெட்டிங் மேட்ச் என்றால் அது எங்கள் ஊர் பள்ளி மைதானத்தில் தான் நடக்கும்,  சில சமயம் யார் எந்த டீம், யார் அடித்த பந்து வருகிறது என்று கூட தெரியாத அளவிற்கு ஒரே நேரத்தில் நான்கைந்து மெட்ச்களும் நடக்கும்.
 
ஊரில் தென்னை மரங்களுக்கு பஞ்சமில்லை என்பதால் ஆரம்ப காலத்தில் தென்னை மட்டையில் செதுக்கப்பட்ட பேட்களுக்கு பஞ்சமிருக்காது. பிளாஸ்டிக் பந்துகளிலிருந்து ரப்பர் பந்துகளுக்கு மாறும் போது தான் தென்னைமட்டை பேட்களின் பலவீனம் புரிந்து  மெதுவாக மரப்பலகைகளை தேடியெடுத்து அவற்றை செதுக்கி விளையாட ஆரம்பித்தோம்.  பின்னர்  சிறுக சிறுக பணம் சேர்த்து எங்கள் டீமுக்கென ! ஒரு நல்ல  பேட் வாங்கினோம்.

 
அந்த காலத்தில் நாங்கள் மிகவும் மெனக்கெடவும் கவலை கொள்ளவும் வேண்டியிருந்தது பந்துகளுக்காக தான். மற்ற அணிகளுடன் போட்டியிடும் போதும் எங்களுக்கு பந்தையப்பொருளும் பெரும்பாலும் பந்தாகத தானிருக்கும். பந்து வாங்குவதற்கென்றே வசூல் வேட்டைகள் நடக்கும், பந்துகளின் விலை 7 ரூபாயிலிருந்து 10 ரூபாய்க்குள் தான் இருக்குமென்பதால்   ஆள் ஒன்றிக்கு 50 காசு அல்லது ஒரு ரூபாய் தான் அதிகபட்சமாக இருக்கும். (இப்போது வழக்கொழிந்துவிட்ட 50 காசெல்லாம்  அப்போ  எங்களுக்கு பெரிய காசுப்பா)   இதற்க்கு காசு தராதவர்களை காசு தரும் வரையில் டீமில் சேர்க்க கூடாதென்று சட்டமும் இருந்தது. பந்து வாங்கும் போது எங்களின் விருப்பத்தேர்வு "stumper" பந்துகளாகத் தானிருக்கும்.  மற்ற பந்துகளை  இவையே கொஞ்சம் அதிகம் தாக்குபிடிக்க கூடியவை.  இப்படி இன்னும் நிறைய கதைகள் இருக்கின்றன சொல்வதற்கு.

படாத இடத்தில் பட்டு ஹாஸ்பிட்டல் போய் அங்கு இருந்த லேடி டாக்டடிடம் என்ன சொல்வதென்று புரியாமல் முழித்த நாட்கள், காரணமேயில்லாமல் உருவாகும் சண்டைகள் , கிரிக்கெட்டால் ஊர் தாண்டியும் கிடைத்த நண்பர்கள், விடுமுறை நாட்களில் மட்டும் ஊர் சுற்றுவதற்கு எங்களுக்கு இருந்த சுதந்திரம், எங்களை சுமந்து திரிந்த சைக்கிள்கள், அவுட் ஆனாலும் இல்லையென்று சிறுபிள்ளைகள் போல சாதிக்கும் பெருசுகள், செவனேன்னு ஓரமா போகிறவர்கள் மீது பந்தடித்து விட்டு திட்டுகள் வாங்கியது, உடைத்த வீட்டுக்கூரை ஓடுகள் மற்றும் பல்புகள், தோப்புகளில் விளையாடும் பொது யாருமறியாமல் காணாமல் போகும் இளநீர் குலைகள், ஆசை ஆசையாய் வாங்கிய பேட், பரிட்சை நேரங்களில் விளையாட விதிக்கப்படும் தடைகள், அதையும் மீறி விளையாடப்போனதால் வெட்டி சின்னாபின்னமாக்கப்பட்ட பேட்,  கிரிக்கெட் வீரர்களின் விவரங்களை அச்சடித்து வரும் அட்டைகளை சேகரிப்பதற்காகவே வாங்கப்படும் "Big Fun" bubble gums, செய்திதாள்களில் வரும் கிரிக்கெட் வீரர்களின் படத்தை நோட்டுபுத்தகங்களில் ஒட்டியதால் பள்ளியில் ஆசிரியரிடமிருந்து வாங்கி கட்டிக்கொண்டவை, மழைக்காலங்களில் வயலில் முட்டியளவு தண்ணீரில் விளையாடும் கிரிக்கெட், நடுரோட்டில் விளையாடி ஊர்வம்பை விலைக்கு வாங்குவது...... என்று  இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் கிரிக்கெட் பற்றிய நினைவுகளை.
 

இன்று களமிறங்கி கிரிக்கெட் விளையாடுபவர்களை விட, மொபைலில் விரல் வித்தை காட்டி கிரிக்கெட் விளையாடுபவர்களும், டிவிக்கு முன்னால் அமர்ந்து நொறுக்குத்தீனியையும்  வைத்துக் கொண்டு என்னய்யா இது இவனுக்கு அடிக்கவே தெரியல அங்கே  அடிக்க வேண்டிய பந்தை இங்கே அடிக்கிறான் பாரு, அந்த பந்தை இப்படி திருப்பி விட்டிருக்கலாம், இந்த கேட்சை ரெண்டடி முன்னால்  போய்  நாலடி அந்தரத்தில் பறந்து பிடித்திருக்கலாம் என்று வாய்க்கு வந்தபடி விமர்சிக்கும் பிதாமகர்களே அதிகமாக உள்ளனர்.
 
கிரிக்கெட்  எங்கள் பால்ய காலத்தை ஆக்கிரமித்திருந்தது, நாங்கள் கிரிக்கெட்டை காதலித்தோம்.
 
 


கிழிக்கப்பட்ட பக்கங்கள் - என் டைரியிலிருந்து



 April-02-2011
எண்ணங்களிலும் எழுத்துக்களிலும் உன்னை மட்டுமே நினைக்க வைத்து நீ என்னை ம(று)றந்து போன பின்னரும் என் உடம்பிலுள்ள எண்ணிலடங்கா செல்களில் ஓரிரு செல்களிலாவது உந்தன் நினைவுகள் நிழல் போல ஒட்டியிருப்பதால் உன்னை ஒரேடியாக ஒதுக்கித்தள்ள முடியாமலும், அதே சமயம் ஒட்டி உறவாடவும் முடியாமல் என் விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம் என எல்லாவற்றையும் இங்கே ஒரு ஓரமாக கொட்டி வைக்கிறேன்.  என்றேனும் ஒரு நாள் உன் கண்ணில் பட்டு என் எழுத்துக்கள் உயிர்த்தெழும்  அல்லது மோட்சம் அடையும் என்ற நம்பிக்கையில்....

உனக்காக கடிதம் எழுதும் முயற்ச்சியில்  வெற்றுக் காகிதங்களுடன் போட்டியிட்டு ஒரு புள்ளி கூட வைக்காமல் தோல்வியுடனே திரும்பத் துவங்கி நாட்கள் நூறு தன்னை மாய்த்துக் கொண்டு விட்டன. எனக்கு எழுத கற்றுக்கொடுத்தவள் நீ, உன்னை பற்றி எழுதுவதென்றால் எப்போதும் போல ஏதாவது சும்மா கிறுக்கி வைத்து விட முடியுமா என்ன !!!

உனக்கும் எனக்குமான அறிமுகத்தை நான் இங்கே சொல்லி தான் நீ அறிய வேண்டுமென்றில்லை. உன்னை காதலிக்க வழியில்லாமல் போனதால் உன்னை எனக்கு அறிமுகம் செய்த எழுத்துக்களை காதலிக்க கற்றுக்கொண்டுவிட்டேன். அவற்றை நான் வெறுத்தொதுக்கினாலன்று என்னை தனிமையில்  விட்டு சென்று விடாது.  இப்போதெல்லாம் என்னுடன் நீயில்லாத குறையை இவ்வெழுத்துக்கள் தான் ஓரந்தள்ளி ஒழித்து வைக்கின்றன. ஆனாலும் நான் உன்னை நினைப்பதற்கு மறப்பதில்லை.

மறந்தால் தானே உன்னை நினைப்பதற்கு நான் செய்யும் ஒவ்வொரு செயல்கும் உன்னை தான் நினைவூட்டிக் கொண்டே தான் இருக்கின்றன. இப்போது என்னிடம் இருப்பவையெல்லாம் உன்னுடையவை தான். ஒவ்வொன்றும் உன்னிடமிருந்து கற்றுக்கொண்டது தான். உனக்கு தெரியுமா என்று தெரியவில்லை. வீட்டில் நான் இப்போது  மிகவும் நல்ல பிள்ளையாகிவிட்டேன்.  என்னில் நிறைய மாற்றம் இருக்கிறது என்கிறார்கள், பெரியவர்களை மதித்து நடந்து கொள்கிறேனாம்யாரிடமும் எதிர்த்து பேசுவதில்லையாம், வீட்டு நிர்வாகங்களை கூட நான் நன்றாக பார்த்து கொள்கிறேனாம், என்னை மெச்சுகிறார்கள் பெற்றோர்கள். அவர்கள் இதை சொல்லும் போதெல்லாம் என்னிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே வெளிப்படுகிறது.  கொஞ்சம் கொஞ்சமாய் வார்த்தைகளால் வடிவமைத்து என்னுள் பல மாற்றங்கள் செய்த உனக்கல்லவா இந்த பாராட்டுகள் சேர வேண்டும். 

ஒரு தாயின் பொறுமை உனக்கு. இல்லையென்றால் யாருக்குமே உதவாமல் இருந்த இந்த களிமண்ணை பக்குவமாய் பிடித்து ஒரு சிலையாக்கியிருக்க முடியமா..  இந்த களிமண்ணிலும் காதல் கனியச் செய்தவள் நீ. கவிதைகள் கற்று தந்தாய். கவிதையினூடே காதலிக்கவும் கற்று தந்தாய்.

நீ என்னிடம்  காதலை கூறிய நாள் உனக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்கு நினைவிருக்கிறது. இந்த சொல்லை கேட்ப்பதற்க்காகத் தானா நான் பிறந்தேன் என்று நினைத்து கொண்ட அக்கணம் என்னுடல் இவ்வுலகம் விட்டு பிரியும் வரை மறவாது கண்மணி. ஈரம் வேண்டி வெகுநாள் காத்திருந்த மண் பெய்யும் மழைத்துளிகளை உள்வாங்கிக்கொள்வது போல உன் வாயிலிருந்து உதிர்ந்த அந்த வார்த்தைகளை உள்வாங்கி பத்திரப்படுத்தி வைத்துக்கொன்டது உன்னைத்தவிர எவரும் நுழைய முடியாத என் இதயக் கருவறை.

ஒவ்வொரு ஆணும் காதலிடமும் காதலியிடமும் கோழைகள் தான் என்பதை அக்கணம் நானறிந்து கொண்டேன். என்றேனும் உள்ளத்தில் உள்ளதை உள்ள படி சொல்வாயா என்று ஏங்கியிருந்த நாட்களில் எல்லாம் என்னை மெலும் ஏங்க வைத்தாய், ஒரு வழியாய் தைரியத்தை தத்தெடுத்து உன்னிடம்  இன்று சொல்லியே ஆக வேன்டும் என்று வந்த நாளில் என்னையும் முந்திக்கொன்டு நீ காதலை முன் மொழிந்த  அந்த கணத்தில் என் இதயத்துடிப்பின் வேகத்தையும், நான் சொல்ல வந்ததை நீ சொல்லிவிட்டபடியால் என்ன சொல்வதென்று அறியாமல் தடுமாறிப் போய் குளறியபடி வார்த்தைகளை மறந்த என் நாவையும் இன்று நினைத்தாலும் மனதிற்க்குள் எதோ இனம் புரியாத உணர்வு ஒன்று என்னை உருக்குலைக்கிறது.  

அந்நாள் வரை காதல் கவிதைகள் கண்டால் "இதை எழுதியவன் நிச்சயமாக ஒரு பைத்தியமாகத் தானிருப்பான் என்று சொல்லி வந்த என்னுள்ளம் கவிதைக்காக வையகமெங்கும் வார்த்தைகளை தேடியலைந்து சேகரிக்கத் துவங்கியதையும் நான் உண்ர்தேன். சில நாட்களில் உனக்கான கவிதைகளுக்கு தமிழில் வார்த்தைகள் போதாது என்பதையும் தெரிந்து கொன்டேன். ஒருவனை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது காதல்.
ஆணை பெண்ணாக்கும் வித்தை காதலுக்கு மட்டுமே தெரியும் என்று நினைக்கிறென். ஆம்.. பல தடவை காதல் முன்னும் அவள் கண்கள் முன்னும் நான் ஒரு ஆண் என்பதை மறந்திருக்கிறேன். ஆண்மைக்குள்ளும் அச்சம் மடம், நாணம் என எல்லா குணங்களும்    ஒருவருமறியாமல் ஏன் நானே கூட அறியாமல் ஒளிந்திருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டேன். ஆனால் அது நான் உன் கண்பார்த்து பேசும் தருணங்களில் மட்டும் தான் தலைகாட்டி என்னை தடுமாற வைக்கிறது.  

பள்ளிக்கு முன்னும், கோவில் வாசலிலும், காலேஜ் பஸ் ஸ்டாப்களிலும் பிச்சைக்காரர்களுக்கு போட்டியாய் நிற்ப்பது காதல் எனும் பேய் பிடித்து பிசாசுகளுக்காக காத்திருக்கும் பெண் பித்தர்களாக தான் இருக்கும் என்று நண்பர்களிடம் சொல்லி சிரிக்கும் போது எனக்கு தெரிந்திருக்கவில்லை இப்படி உனக்காக நானும் ஒரு நாள் கோவில் வாசலிலும், பஸ் ஸ்டாப்பிலும் உனக்காக காத்திருக்க போகிறேன் என்று. ஆனால் நான் ஒரு பிசாசுக்காக காத்திருக்கவில்லை, தேவதைகளும் பொறாமை கொள்ளுமளவு அழகுடைய தேவதைக்காக காத்திருந்தேன், ஒரு பெண் பித்தனாக காத்திருக்கவில்லை. ஒற்றை பார்வையில் சித்தம் கலங்க செய்து இனி என் வாழ்வின் மொத்தமும் அவள் தான் என்று நினைக்க வைத்த என் தேவைதையின் ஒரு பக்தனாக காத்திருந்தேன். 

அரை மணி நேரம் தாமதனாய் வந்த நண்பன் அதற்கு எவ்வளவோ காரணங்கள் சொல்லியும் சமாதானமாகாமல் கோபித்துக்கொண்ட நான், காலையில் வருவாய் என்று உனக்காக காத்திருந்த ஒரு நாள் அரை நாள் தாமதமாய் வந்த உன்னிடம் அதிர்ந்து கூட பேசாமல் அடங்கிப்போனதன் அர்த்தம் தான் காதல் என்று அழகாக அழுத்தி சொன்னது என்னுள்ளம்.

உன் வருகைக்காக நான் காத்திருக்கும் தருணங்களில் என்னை பற்றிக்கொள்ளும் தனிமையை துரத்திவிட்டு உன் நினைவுகள் வந்து ஒட்டிக்கொள்ளும். ஒட்டிக்கொண்ட நினைவுகள் ஒரு ஓரமாய் ஒதுங்கி நிற்காமல் என்னுள் நான் ஒழித்து வைத்திருக்கும் வார்த்தைகளை ஓன்று சேர்த்து உன்னை பற்றி எழுதத் துவங்கும். உன்னை பற்றி என்ன எழுதினாலும் அவை கவிதையாகவே உருமாறிவிடுகின்றன.



"காத்திருப்புகள் வலியைத்தான் தருமாம், 
உனக்கான காத்திருப்புகளனைத்தும்  
எனக்கு 
கவிதைகளை மட்டுமே தருகின்றன".


என்றேனும் ஒரு நாள் உன் கண்ணில் பட்டு என் எழுத்துக்கள் உயிர்த்தெழும்  அல்லது மோட்சம் அடையும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்...


ரத்தவாடை..




கண்மூடினால் 
அவன் சின்னாபின்னமாய் 
சிதறியோடிய  காட்சிகள் விரிவதைக்கண்டு 
பயத்தில் ஓடி ஒளிகிறது தூக்கம்,
 
எங்கு எதை நோக்கினும் 
சிவப்பு வர்ணமாகவே  தெரிகிறது 
என் கண்ணுக்கு, 

அவ்விடம் தாண்டிச்செல்லும் 
போதெல்லாம் அவனின்  சிரித்த 
முகமே முன் நிற்கிறது 

டெட்டாலுக்கும்  பணியாமல் 
பரவி நிற்கிறது தேங்கி நின்ற
ரத்தத்தின் வீச்சம்,

"எப்படி இருக்கார், 
எப்போது கண்முளிப்பார் 
ஏதாவது பேசினாரா 
எப்போ பேசுவார்
எனக்கு அவரை பாக்கணும்" 
என்றவர் மனைவி அடக்கமுடியா 
அழுகைச்  சத்ததுடன் எங்களிடம் 
கேட்க்கும் போதெல்லாம் 

எதைப்பற்றியும் 
யோசிக்காமல் யோசிக்கிறேன் 
பத்து நொடி முன்பு அந்த விபத்து நடந்து 
அதில் சிக்கி 
நானே இறந்து போயிருக்கலாம் என்று . 



கடந்த ஆண்டு நினைவுகள்...

தொண்ணூறுகளின் இறுதியில் ஆரம்பித்த டைரி எழுதும் பழக்கம் 2010 களின் ஆரம்பத்திலிருந்து சோம்பேறித்தனத்தாலும் பதிவுலகின் அறிமுகத்தாலும் என்னிடமிருந்து வழக்கொழிந்து போய் விட்டது. ஆனாலும் ஒரு வருட டைரிக்குறிப்புகளை மொத்தமாய் ஒரே பதிவில் எழுதுவதும் சுவாரஸ்யமாகத் தானிருக்கிறது. 
  
ஒவ்வொரு வருடமும் நம்மை கடந்து செல்லும் பொது அதன் நினைவாக அவ்வருடத்தில் நடந்த சந்தோசம் அல்லது துக்கம் என ஏதாவது நினைவுகளை நமக்கு விட்டு தான் செல்கின்றன. இப்படி என்னை கடந்து சென்ற கால் நூற்றாண்டுகளுக்கும் மேலான வருடங்களில் கடந்த 2010 கொஞ்சம் அதிகமாகவே சந்தோசங்களையும், சிறிதும் பெரிதுமாய் பல துக்கங்களையும், இழப்புகளையும் அதன் நினைவாக தந்து விட்டு தான் சென்றன. 
 




கடந்த வருடத்தில் நடந்த மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம் அண்ணனின் கல்யாணம் தான். கிடைத்த ஆறு நாள் விடுமுறையில் பத்திரிக்கை வைப்பது முதல்  அனைத்து வேலைகளையும் முன் நின்று நானே பார்த்துக்கொண்டதால்  உடலளவில் சில இடையூறுகள் வந்தாலும் மனதளவில் நான் பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்.  எங்கள் வீட்டில் நடந்த முதல் விசேஷம். அது மட்டுமல்லாமல் சுமார் பத்து வருடங்களுக்கு பின் குடும்பத்திலுள்ள சொந்த பந்தங்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கிடைத்த வாய்ப்பு இது. சிறு வயதில் பார்த்து பயந்த அண்ணன்கள் மற்றும் உறவுகள் அனைவரும் அன்றைய தினத்தில் நண்பர்களாய் தெரிந்தார்கள்..  எப்போதும் ஆயிரம் பொய்கள் சொல்லி வருடத்திற்கொரு முறை ஊருக்கு வரும் நான்  கடந்த வருடம் தான் இன்னும் கொஞ்சம் அதிகமான பொய்கள் சொல்லி இரண்டு முறை இந்தியா வந்தேன்..

கடந்த வருடத்தின் மற்றொரு சந்தோசமான் விசயம் எனக்கு பதிவுலகம் அறிமுகமானது தான். வருடத்தின் மூன்றாவது  மாதம் வரை இப்படி ஓன்று இருப்பதே எனக்கு தெரியாது. அறை நண்பரின் உதவியால் அறிந்த பின்னர் ஏன் என்னால் எழுத முடியாது என்று எனக்கு நானே ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டு துவங்கியது தான் இந்த வலைப்பூ. "வெறும்பய" என்ற பெயரை தேர்வு செய்வதற்கே கிட்ட தட்ட ஒரு மாதங்கள் எடுத்துக்கொண்டேன்..

பதிவுகள் எழுத ஆரம்பித்தது முதல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வரை என்னை இப்போதுள்ள் நண்பர்களுக்கு தெரியாது.. என்னை எவரும் அறிந்திரா காலகட்டத்தில்  தேவா அண்ணன் மூலமாக வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு ஓரிரு நண்பர்கள் கிடைத்தார்கள். பின்னர் சிறு துளி பெரு வெள்ளம் என்பது போன்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நண்பர்கள் கூட்டம் வளர்ந்து கொண்டே போனது. இன்னும் வளர்ந்தபடி தான் இருக்கிறது.. இன்னார் இன்னாரென்று தான் என்று குறிப்பிட்டு செல்ல முடியாதபடி நண்பர்கள் பட்டாளமே  இருக்கிறது.  நண்பர்கள் மட்டுமல்லாமல் சகோதர்கள், சகோதரிகள், தோழிகள் என நான் பதிவுலகத்தால் பெற்ற உறவுகள் ஓராயிரம்.

பதிவுகலத்தால் நான் பெற்ற இன்னொரு பொக்கிஷம் வாசிப்பு.. சிறு வயதிலிருந்தே கொஞ்சம் கூட வாசிப்பு பழக்கமே கிடையாது.. இது வரைக்கும் நான் படித்த புத்தகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் பெரிய சைஸ் புத்தகங்கள் என்றால் கையில் தொடுவது கூட இல்லை. ஆனால் சமீபக் காலமாக எல்லாம் மாறி வருகிறது, பதிவுலகில் நல்ல பதிவுகளை தேடிப்படிப்பதொடு மட்டுமல்லாமல் புத்தகங்கள் தேடி நூலகங்களுக்கும் செல்லும் நிலை வந்துவிட்டது. இப்போது தான் நான் செய்த  ஆரம்பகால தவறுகள் தெரிகின்றன. வாசிப்பு அதிகமாகும் பொழுதுகளில்  எழுதுவது குறைந்து விடுகிறது. 

பதிவுலகமும் மற்ற பல விஷேசங்களும்   இந்த ஆண்டு முழுவதும் சந்தோசத்தை தந்தாலும் கடைசி மாதம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது. முதல் வாரத்திலொரு நாள்  அதிகாலையில் மாரடைப்பால் உயிரிழந்ததாக  வந்து சேர்ந்த சகோதரனின் மரண சேதி, அதற்கு அடுத்தடுத்த  வாரத்தில் வந்த இரு கல்லூரி  நண்பர்களின் மரண சேதி மற்றும் வருடத்தின் கடைசி வாரத்தில் நடந்த பைக் விபத்தினால் இன்று வரை நினைவு திரும்பாத நிலையில் இருக்கும் நண்பன்   என கடந்த மாதம் முழுவதும்  வந்து சேர்ந்தது எல்லாமே துக்கச் செய்திகள் தான். கடந்த பதினோரு மாதத்தில் கிடைத்த மகிழ்வான தருணங்கள் அனைத்தையும் இந்த இழப்புகள் மூடி மறைத்து விட்டன.

இரவும் பகலும் கலந்து உருவாகும் ஒரு நாளை போல சந்தோசமும் துக்கமும் கலந்தது தான் வாழ்க்கையாக இருந்தாலும் நானும் ஒரு சராசரி மனிதனான காரணத்தால் இழப்புகளும் ஏமாற்றங்களும் இல்லாத அடுத்து வரும் வருடங்களை எதிர்பார்த்துக் கொண்டு  இந்த நாட்குறிப்பு முற்று பெறுகிறது.

திரும்பி பார்க்கிறேன் என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத அழைத்து கடந்த காலத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பை ஏற்ப்படுத்திய சகோதரி கௌசல்யா அவர்களுக்கு நன்றி..


படம் உதவி நண்பர் - எஸ்.கே

மிட்டாய்க் கிழவி..

முதல் காதல், முதல் முத்தம் போன்றவை வாழ்வின் இறுதி நிமிடங்கள் வரை மறவாமல் இருப்பது போன்று என்றும் மனதிற்குள் குடிகொண்டிருப்பவை பள்ளி மற்றும் கல்லூரிக் கால நினைவுகள் தான். இந்த காலங்களை மட்டும் நாம் பின்னாளில் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒதுக்கி வைக்க முடியாது. இழந்தால் திரும்ப பெற முடியாத பொற்க்காலம் இவை.

ஆரம்ப கல்விகள் வீட்டருகில் உள்ள ஒரு சிறிய தொடக்கப்பள்ளியில் தான். அப்போதெல்லாம் ஒன்றாம் வகுப்பு சேர்வதற்கு கையை தலைக்கு மேலாக கொண்டு சென்று காதுகளை தொட வேண்டும், அப்படி காதுகளை தொட முடியவில்லை என்றால் அடுத்த வருடம் தான் பள்ளியில் சேர முடியும். நான் பள்ளியில் சேரும் போது என் தாத்தா ஒருவர் அங்கு ஆசிரியராக வேலை பார்த்ததால் அதிகம் சிரமப்படவில்லை. ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றளவில் வேறு எந்த பள்ளிகளும் இல்லாததால் மக்கள் தொகைக்கு பஞ்சமில்லை.

பள்ளிக்கூடத்தில் ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தான் சிமெண்ட் கட்டிடம், இந்த கட்டிடத்தை ஆபீஸ் ரூமுக்காகவும் சத்துணவு பொருட்கள் வைப்பதற்கும் மட்டுமே பயன் படுத்தினார்கள். மற்ற படி வகுப்பறைகள் அனைத்தும் மூன்றடிக்கு மண்சுவரால் கட்டப்பட்டு அதற்கு மேல் தென்னை ஓலைகளால் கூரைகள் போட்டிருப்பார்கள். ஐந்தாம் வகுப்பு உள்ள மாணவர்கள் தரையில் தான் அமர வேண்டும். அதற்கு மேல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பெஞ்ச் போட்டிருப்பார்கள்.

நான் படித்த பொழுது எனக்கு மிகவும் பிடித்த வகுப்பறை பூவரசு மர நிழலில் நடக்கும் வகுப்பு தான். தொட்டு செல்லும் தென்றலும், மரத்திலிருந்து எட்டி பார்க்கும் அணில்களும், பாடம் நடத்தும் வேளைகளில் வந்தமர்ந்து ராகம் பாடும் காகங்களும், மரத்திலிருந்து விழுந்து கொண்டிருக்கும் பூக்களும், காற்றோட்டமான வெட்ட வெளியும் இந்த இடத்தை தவிர வேறெங்கு கிடைக்கும். இது மட்டுமல்லாமல் பள்ளி வளாகத்தில் நான்கைந்து மாமரங்களும் உண்டு. அவைகளின் நிழல்களிலும் வகுப்புகள் நடக்கும். காற்றோட்டமான இடத்தில் வைத்து பாடம் நடத்துகிறோம் என்று ஆசிரியர்கள் கூறினாலும் இதற்கு முக்கிய காரணம் வகுப்பு பற்றாக்குறைகள் தான். மழைக்காலங்கள் என்றால் வேறு வகுப்புகளுடன் அமர வைத்து விடுவார்கள். பெரும்பாலும் அந்த வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரிய, ஆசிரியைகள் தான் நமக்கும் ஆசிரியர்களாக இருப்பார்கள் அதனால் அவர்களுடனையே நமக்கும் பாடம் நடத்துவார்கள்.

பள்ளியில் என்னை மிகவும் கவர்ந்தது சுற்றிலும் வளர்ந்து நிற்கும் மா மரம், இலந்தை மரம், நாக மரம், கொய்யா மரம் போன்றவை தான். மதிய இடைவேளையிலும், மற்ற இடைவேளைகளிலும் நாங்கள் சங்கமிப்பது இந்த மரங்களில் அடியில் தான். இந்த மரங்களில் கல்லடி படாத மரங்களே கிடையாது. நாங்கள் எறியும் கல்லிற்கு தப்பாதே பழங்களே இல்லை எனலாம். இதற்காக நானும் நண்பர்களும் வாங்கிய பிரம்படிகளும் ஏராளம்.

மிட்டாய்க்கிழவி எங்களுக்கு மறக்கமுடியாத ஒரு தெய்வம். பள்ளிக்கூடத்தின் பின்புறம் தான் கிழவியின் வீடு. கடையெல்லாம் கிடையாது. ஒரு கூடையில் தான் மிட்டாய்களை அள்ளிக் கொண்டு வந்து பள்ளியருகில் கடைவிரிப்பாள். மீன் மிட்டாய் (மீன் வடிவில் இருக்கும்), தேன் மிட்டாய், இலந்தை ஆடை, ஆரஞ்சு மிட்டாய், ரப்பர் மிட்டாய், பம்பர மிட்டாய் (நிறைய பெயர்கள் மறந்து விட்டன) என நாங்கள் கண்டு கேட்டிராத மிட்டாய்கள் எல்லாம் எங்களுக்கு கிழவி தான் அறிமுகம் செய்வாள். இதில் எந்த மிட்டாயும் 20 பைசாவுக்கு மேல இருக்காது. தினமும் வீட்டிலிருந்து அழுது அடம்பிடித்து எப்படியும் அஞ்சு அல்லது பத்து பைசா வாங்கி தினமும் மிட்டாய் வாங்கிவிடுவேன். அது மட்டுமில்லாமல் புளி காய்க்கும் சீசனில் பள்ளி அருகிலுள்ள புளிய மரத்திலிருந்து புளியம்பழங்களையும் அருகிலுள்ள முந்திரி தோப்பிலிருந்து முந்திரிப்பழங்களை பொறுக்கி வந்து மிட்டாய்க் கிழவியிடம் கொடுத்தும் மிட்டாய் வாங்கி தின்றிருக்கிறோம். இதோ போதாதென்று மிட்டாய்க்காக வீட்டில் காசு திருடி அம்மாவிடமிருந்து தோசைக் கரண்டியால் வாங்கிக் கட்டிக்கொண்ட நாட்கள் ஏராளம்.

1992 நவம்பர் மாதம் நிற்காமல் பெய்த மழையின் பிடிவாதத்தால் அணைகள் நிரம்பி உடைந்துவிடுமோ என்ற அச்சத்தில் நள்ளிரவில் அணையை திறந்து விட எங்கு செல்வதென்று தெரியாமல் ஆவேசமாய் ஊருக்குள் புகுந்த தண்ணீரால் நூறுக்கணக்கான விடுகள் இல்லாமல் போக ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு இப்பள்ளிக்கூடம் தான் தன் மடிகொடுத்து ஓரிரு வாரங்கள் தூங்க வைத்தது.

ஐந்தாம் வகுப்பு வரை தான் நான் இப்பள்ளியில் பயின்றேன். பின்னாளில் நான்கைந்து வருடங்களுக்கு பின் இப்பள்ளி கொஞ்சம் கொஞ்சமாக உருமாற ஆரம்பித்திருந்தது. மண்சுவர்களும், ஓலைக்கூரைகளும் ஓரந்தள்ளப்பட்டு மாடிகள் வளர்ந்தன. சுதந்திரமாய் இருந்த பள்ளியை சுற்றிலும் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டன. பள்ளிக்குள் நின்ற ஒரே ஒரு மாமரத்தை தவிர எங்களுக்கு நிழல் தந்த பூவரசு மரம் உட்பட அனைத்தும் வெட்டப்பட்டன. இப்போது தலை சுற்றி காது தொட்டு பிள்ளைகளை சேர்க்கும் பழக்கமும் இல்லை. ஆறு வருடம் முன்பு மிட்டாய்க் கிழவியும் போய் சேர்ந்து விட்டாள். கடந்த விடுமுறையில் எதேச்சையாய் அவ்வழியே சென்ற போது எல்லாம் புதியதாகிய பின்னரும் அம்மாமரமும், அதே பழைய ஆபீஸ் ரூமும் மட்டும் தான் நான் பயின்ற பள்ளிக்கு அடையாளமாய் அங்கிருந்தன. ஆனால் அந்த பழைய ஞாபகங்கள் என்றும் மனதில் இனிமையாய் பசுமைமாறா நினைவுகளுடன் இன்றும் அசைபோடுகின்றன..



தமிழ்மணமும் தொடர்பதிவுகளும்..



தமிழ் மனம் விருதுகள் அனைவரும் அறிந்ததே. அந்த போட்டியில் கலந்து கொள்ளாத பதிவர்களே இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எனது பதிவுகள் எனைத்தும் மொக்கையாக இருந்தாலும் அதிலிருந்து சில சுமாரான பதிவுகளை தேர்ந்தெடுத்து ஒரு ஆர்வக்கோளாறில் மூன்று பதிவுகளை நானும் போட்டிக்கான பகுதியில் இணைத்திருந்தேன். இது நடந்து சில வாரங்கள் ஆகிவிட்டன. ஏறக்குறைய இந்த விஷயத்தை மறந்து விட்டேன் எனலாம். சொல்லப் போனால் எந்த பகுதியில் எந்த இடுகையை இணைத்தேன் என்பதையே மறந்து விட்டேன்.

இன்று எதேச்சையாக தமிழ்மணத்தில் ஏதாவது விசேஷம் இருக்கிறதா என்று நோட்டம் விடுகையில் கண்ணில் பட்டது தமிழ்மணம் விருதுகள் 2010 முதல் சுற்று முடிவுகள் . அப்போது தான் நானும் இந்த போட்டியில் பங்கேற்றதும் எனது சில இடுகைகளை இணைத்ததும் நினைவுக்கு வந்தது. நமது இடுகை எப்படியும் இங்கு இருக்கப்போவதில்லை என்ற நம்பிக்கையில் யார் யாரது இடுகைகள் எல்லாம் முதல் சுற்றில் தேர்வாகியிருக்கிறது என்று ஒவ்வொரு பகுதியாக பார்த்துக்கொண்டிருக்கையில் அங்கே ஒரு பிரிவில் பார்த்த ஒரு பதிவை என்னால் நம்பவே முடியவில்லை. என்னுடைய ஒரு பதிவும் இரண்டாவது சுற்றிற்கு தேர்வாகியிருக்கிறது.


வாக்களித்து முதல் சுற்றில் வெற்றி பெற செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி, மற்றும் மக்களே யார் யார் இன்னும் இந்த இடுகைக்கு வாக்களிக்கவில்லையோ அவர்கள் கோழி பிரியாணிக்கும், 2000 / - ரூபாய் பணத்திற்கும் (ஒரு ஓட்டுக்கு இப்போ 2000/- ரூபாய் தானே தறாங்க) ஆசைப்படாமல் சென்று வாக்களியுங்கள்.

..நன்றி..

*****************************************************************************

சீரான எழுத்துக்களால் கவிதைகள், கதைகள் என எழுதி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அலைவரிசை நண்பர் அஹமத் இர்ஷாத் அவர்கள் கடந்த ஜூலை மாதம் என்னை தொடர் பதிவெழுத அழைத்திருந்தார். என்ன காரணமோ தெரியவில்லை இன்று வரை அந்த பதிவை என்னால் எழுத முடியவில்லை. ரொம்ப கஷ்டமான விசயமாக இருக்குமோ என்று நீங்கள் யோசிக்கலாம், உண்மை தான்.. நீங்களே ஏதாவது ஒரு தலைப்பை தேர்வு செய்து எழுதுங்கள் என்று முழு சுதந்திரமும் தந்திருந்தார்.

ஒரு தலைப்பை தந்து இந்த தலைப்பில் தான் எழுத வேண்டும் என்றாலே நமக்கு கண் விழி பிதுங்கி போய் விடும். நானும் நண்பர் அன்பாக அழைத்தாரே எப்படியாவது ஏதாவது ஒரு தலைப்பை வைத்து எழுதி விட வேண்டுமென்று எழுத முடிவு செய்து மாதங்கள் ஐந்து ஆகி விட்டது. ஆனால் இன்னும் என்னால் எந்த தலைப்பையும் தேர்வு செய்து எழுத முடியவில்லை. எப்படியோ அதையும் காரணமா வச்சு ஒரு பதிவு ரெடி பண்ணியாச்சு..


*****************************************************************************

நீ நான் அவன் என்ற தளத்தில் எழுதும் நண்பர் வெற்றி அவர்கள் என்னை கமலின் சிறந்த பத்து படங்கள் என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார். அவருக்காக எனக்கு பிடித்த சில படங்களை இங்கே பகிர்கிறேன்.

  • அன்பே சிவம்
  • வேட்டையாடு விளையாடு
  • வசூல் ராஜா M B B S
  • பம்மல் K சமந்தம்
  • பஞ்ச தந்திரம்
  • அவ்வை சண்முகி
  • அபூர்வ சகோதரர்கள்
  • சத்யா
  • தெனாலி
  • மைக்கேல் மதன காமராஜன்.
*****************************************************************************

அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு.. ஒரு வழியா நான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சதிலிருந்து போன வாரம் வரைக்கும் என்னையும் மதிச்சு கூப்பிட்ட அத்தனை தொடர்பதிவுகள் எல்லாம் எழுதி முடிச்சாச்சு.. இது தான் என்னோட கடைசி பதிவும், யாருல அங்கே விசிலடிச்சு கை தட்டி சிரிக்கிறது... படுவா கொன்னேபுடுவேன்.. ஓவரா சந்தோஷ படாதீங்கல.. நான் சொன்னது இந்த வருசத்துக்கு.. ஓகே மக்கள்ஸ் எல்லாருக்கும் என்னோட புத்தாண்டு நல்வாழ்த்துக்களை இப்பவே சொல்லிக்கிறேன்.. சந்தோசமா அடுத்தவங்களுக்கு சங்கடமில்லாம கொண்டாடுங்க..

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஆண்டுவிழாக்களும் அலப்பறைகளும்..

வாழ்வின் கடைசி நாட்கள் வரை மறவாத அல்லது மறக்க முடியாத இனிமையான பொழுதுகள் என்று கேட்டாலே அதில என் பள்ளி நாட்களையும் தாராளமா, இல்ல இல்ல கண்டிப்பா சேர்க்கலாம். ஒரு கவலையும் இல்லாம, தெரியாம ஓடியாடி எல்லாரையும் ஓட்டி எடுத்து, பல பன் வாங்கி நடந்த காலம் அது. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்தது வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு தொடக்கப்பள்ளியில தான். அங்க ஆண்டுக்கொரு முறை ஏதாவது விழா நடத்த வேண்டுமே என்று வேண்டாவெறுப்பாக நடத்துவாங்க. அதுக்கு எங்க கிட்ட ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய் வசூலிப்பாங்க அந்த காசை வீட்டிலிருந்து வாங்குவதற்கு ரெகமன்டேசன் தேடி அலைஞ்சிருக்கேன். எதுவும் கெடைக்காம வீட்ல இருந்து காசு வாங்க நான் பட்ட பாடு இன்னொரு கட்டுரை தேறும். அந்த காசில் தான் ஆண்டு விழாவிற்கான அலங்கார பெருட்கள், மதிய சாப்பாட்டுக்கு உணவுப்பொருட்கள் எல்லாம் வாங்குவாங்க. ஆண்டுவிழாவிற்கு தலைமை தாங்குவதற்கும் ஊரிலுள்ள பெரியவர்களை தான் அழைப்பார்கள். அவங்க அங்க வந்து நாட்டாமை பண்ணுவாங்க பாருங்க, எங்க வாத்தியார் எல்லாம் அசடு வழிஞ்சே சமாளிப்பாங்க. அந்த ஆண்டுவிழாவின் போது எங்களுக்கு சந்தோசம் தரக்கூடிய ஒரே விஷயம் ஆடை தான், அன்று மட்டும் தான் எங்கள் பள்ளியில் சீருடை இல்லாம மற்ற உடைகள் அணிய அனுமதி. மற்றபடி ஆண்டு விழாக்களில் நடக்கும் எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொண்டதில்லை. ஹி ஹி எப்டியும் நாம தான் ஜெய்போம். பாராட்டுவாங்க. நமக்கு தான் மத்தவங்க பாரடுனா ஒரே ஷய்யா இருக்குமே. நாங்க எல்லாம் அப்பவே அப்டி தெரியுமா.

ஆறாம் வகுப்பில் சற்று தொலைவில் உள்ள பள்ளியில் என்னை சேர்த்து, இல்ல தள்ளி விட்டாங்க . அந்த வட்டாரத்திலையே அது தான் பழமையான மற்றும் பெரிய பள்ளிக்கூடம். படிக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையும் அதிகம். இங்க பழைய பள்ளி போல இல்லாம ஆண்டு விழாக்களை பெரிய அளவில் நடத்துவாங்க. என்னடா விழாவ பத்தி மட்டும் சொல்றானேன்னு நெனைக்கலாம், அது தான் இப்பவும் பசுமையா ஞாபகம் இருக்கு. விழாவில் சிறப்பு விருந்தினராக MLA அல்லது MP தான் கலந்து கொள்வார்கள். விழா ஆரம்பிக்க ஒரு வாரத்திற்கும் முன்னாடியே அதுக்கான ஆயுத்த வேலைகள் தொடங்கிடும். பெரும்பாலும் பசங்களே எல்லா வேலைகளையும் செஞ்சிடுவாங்க, ரெண்டு மூணு ஆசிரியர்கள் மேற் பார்வை பாப்பாங்க . இது ஒரு பக்கம், மத்தவங்க ஆண்டுவிழாவில் நடைபெறவிருக்கும் ஆடல், பாடல்ன்னு பலவிதமான கலை நிகழ்சிகளுக்கு ஒத்திகை பார்க்க தொடங்குவாங்க. இப்படியாக விழாவிற்கு முந்தைய ஓரிரு வாரங்கள் பலருக்கு கொண்டாட்டம். காரணம் ஒன்னும் இல்ல, இந்த தினங்களில் வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. காலையில் வருகைப்பதிவு குடுத்தாலே போதும். அது தான நமக்கு முக்கியம்.

புது பள்ளி, புது சூழல், புதிய நண்பர்கள் என ரெண்டு வருஷம் நல்ல பிள்ளையாய் எந்த வம்பு தும்புக்கும் போனது இல்ல. எந்த நிகழ்சிகளும், மற்றும் விளையாட்டுகளும் கலந்து கொள்ளவில்லை. அப்பறம் எட்டாம் வகுப்பு வந்தவுடன் எல்லாம் மாறிவிட்டது. நண்பர்கள் கூட்டம் மாறிப்போனது, சீ நாறிப்போனது. எதிரிகள் அதிகமானார்கள் (ஒரு பையன் அழகா இருந்தாலே இது தாங்க பிரச்சனை, கிளாஸ்ல எவனெல்லாம் நல்லா படிக்கிறானோ அவனெல்லாம் நமக்கு எதிரி தான். முக்கியமா கிளாஸ் லீடர்) இவர்களில் யாரை எங்களுக்கு பிடிக்கவில்லையோ அவனை பழிவாங்குவது ஆண்டுவிழாக்களில் தான். பழிவாங்கறது அப்டினா அடிதடியெல்லாம் இல்லை அந்த பையன் எந்த விளையாட்டில் பங்கெடுக்கிறானோ அந்த விளையாட்டில் கண்டிப்பாக நாங்களும் இருப்போம். வாலி பால் விளையாட்டென்றால் அவன் டீமிலையே தான் நாங்களும் இருப்போம். எங்களுக்கு வெற்றி முக்கியமல்ல, எதிரியின் தோல்வி தான் முக்கியம் அது நம்ம டீமா இருந்தாலும் சரி. அதே மாதிரி ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு அவனுடனையே ஓடி அவன் காலை தட்டி விடுவது என எல்லா விதமான தொந்தரவுகளும் கொடுப்போம். சுருக்கமா சொன்னா வில்லன் வேலைய சரியா பாத்திருக்கேன்.

பேஸ் பால். கபடி, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் நாங்கள் தான் எப்பவும் ஹீரோ, வெற்றியும் எங்களுக்கு தான், காரணம் அந்த பால்வாடிகள் (அதுதாங்க படிக்கிற பசங்க) இந்த மாதிரி உடம்புக்கு சேதாரம் உண்டாகும் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை. அதனால் நமக்கு எதிரணி தான் எதிரி.

எதிரிகளை அதோடு விட்டுவிடுவதில்லை. படிக்கிற பசங்க தான் பாட்டு போட்டி, பேச்சு போட்டி என எல்லாவற்றிலும் கலந்துகொல்வார்களே, அப்படி பாடும் போதும், பேசும் போதும் சத்தமிடுவதும், அவர்கள் பாடும் பாட்டுகளுக்கு எதிர் பாட்டுகள் பாடுவதும் என அங்கேயும் நாங்கள் கைவரிசையை காட்டிவிடுவோம். இது போன்ற குறும்புகளும், சின்ன சின்ன சண்டைகளும் பத்தாம் படிக்கும் வரையில் தான் நடந்தது.

+1 மற்றும் +2 வந்த போது பள்ளியில் நாங்கள் தான் சீனியர். அதனால பெரும்பாலும் அலங்காரம், நிகழ்ச்சி தொகுப்பு மற்றும் உணவு சம்மந்தப்பட்டவை போன்ற எல்லா பொறுப்புகளும் எங்களிடம் தான் வரும். அந்த சமயங்களில் எங்களுக்கு எதிரிகள் மிகவும் குறைவு. சொல்லப்போனால் இல்லைன்னு தான் செல்லனும். அதனால எல்லா வேலைகளையும் மாணவர்கள், மாணவியர் என நாங்களனைவரும் ஒற்றுமையாக தான் செய்வோம். அந்த நேரங்களில் வகுப்புகளுக்கு செல்வதே கிடையாது. ஆசிரியர்களும் இதை கண்டுகொள்ள மாட்டாங்க. காரணம் அனைவரும் ஓரளவு படிக்கும் மாணவர்கள். (நானும் தாம்பா.. நம்புங்க). இப்படி எப்படியோ நல்லபடியா பள்ளிக்காலம் முடிவுக்கு வந்தது.

கல்லூரி நாட்களில் ஆண்டுவிழாக்கள் பள்ளிக்காலங்களை போன்று சுவாரஸ்யமாக இருந்ததில்லை. ஆனால் கல்லூரியில் ஆண்டுவிழா நடக்கப்போகிறது என்ற செய்தி நோட்டீஸ் போர்டில் பார்த்தால் உடனே எங்களுக்குள் ஒரு மீட்டிங் நடக்கும், அந்த நாளில் எங்கு செல்லலாம் என்று. அன்றே முடிவெடுத்து அதற்குண்டான வேலைகளையும் செய்ய துவங்கி விடுவோம். கல்லூரியில் எங்கள் டீமில் மொத்தம் 14 பேர். ஒரு ஆளுக்கு இவ்வளவு என்று கட்டண வசூல் தொடங்கி விடுவார்கள். ஒரு நண்பனின் வீட்டில் வைத்து வித விதமாய் சமைத்து எடுத்து வருவார்கள். முதல் தடவை நாங்கள் சென்றது காளிகேசம் என்றொரு இடம். அது மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள ஒரு காட்டு பகுதி. (கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ளது) அங்கே பொதுவா ஒரு குறிப்பிட்ட இடம் வரை செல்ல அனுமதி உண்டு. நமக்கு தான் ரூல்ஸ் பிடிக்காதே ஆனால் நாங்கள் காட்டிற்கு உள்ளே சென்று விடுவோம். காலையில் 10 அங்கே சென்றால் மாலை 5 மணி வரை மலையாற்றில் குளியலும் கும்மாளமமுமாய் தொடரும், அந்த இடம் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு. அப்பறம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அங்க போய்டுவோம். முதல் ரெண்டு வருஷம் ஆண்டு விழா எங்களுக்கு காளிகேசத்திலையே கலகலப்பாய் கடந்து சென்றது. இறுதியாண்டில் நாங்கள் கட்டாயமாய் கலந்து கொள்ள வேண்டிய நிலை. பாட்டு கூத்து கும்மாளம் எதுவுமில்லாமல் எதிரிகள், நண்பர்கள் என அனைவரும் ஓன்று கூடி நண்பர்களாகவே பிரிந்தோம்.

**************************************************************

ஓரிரு மாதங்களுக்கு முன்பு சிதறல்கள் எனும் தளத்தில் எழுதும் சகோதரி தீபா அவர்கள் பள்ளி ஆண்டு விழா அனுபவங்கள் என்ற தலைப்பில் என்னை ஒரு தொடர்பதிவு எழுத அழைத்திருந்தார்கள், தாமத்திற்கு ஒரு மன்னிப்பை கூறிவிட்டு, என் வாழ்க்கையில் மீண்டும் கிடைக்காத பள்ளி மற்றும் கல்லூரி காலங்களை நினைவு கூற ஒரு நல்ல வாய்ப்பை தந்த சகோதரி தீபா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

**************************************************************

இனிதாய் இயல்பாய் இழப்பில்லாமல்..

அதிகாலை எழுந்து
எண்ணை தேய்த்துக்குளித்து
புத்தாடை அணிந்து
கோவிலுக்கு போய் சாமி தரிசனம் முடித்து
வித விதமாய் பலகாரங்கள் சுவைத்து
விடிய விடிய பட்டாசுகள் வெடித்து
என இதுவரை கொண்டாடாத
தீபாவளியை போன்றே
இனிதாய்
இயல்பாய்
இவ்வருடமும்
என்னை கடந்து சென்றது

*********

எல்லா வருடங்களை போன்றே எந்த ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்த வருட தீபாவளியும் வந்து சென்றாலும் ஒரு சில சம்பவங்களால் மறக்க முடியாத ஒரு நாளாகவே மாறி விட்டது. அன்று நடந்தவற்றை எளிதில் மறந்து விடவும் முடியாது.


* அதிகாலை 10 மணிக்கே என் தூக்கம் கலைத்த மொபைல் போன்.


* ஏன் இன்று வேலைக்கு வரவில்லை என்று போனில் ருத்திர தாண்டவம் ஆடிய என் மேலதிகாரி..


* பஸ் பயணத்தின் போது ஒரு வேளை நான் அருகில் அமர்ந்து விடுவேனோ என்று இருவர் அமரும் இருக்கையில் ஒரே ஆளாய் ஆக்கிரமித்த தோலின் நிறம் பார்த்துப் பழகும் இன வெறி பிடித்த 80 வயது மதிக்கத்தக்க ஒரு சீன வயோதிகர்.. (விடாபிடியாக நானும் அந்த இருக்கையிலையே அமர்ந்து விட்டேன்)


* முந்தைய நாளிரவு தீபாவளி கொண்டாட்டத்தின் மயக்கம் தெளியாததால் நேரம் தவறிச் சென்று விமானத்தை தவற விட்ட நண்பர் ஒருவர்..


* மாலை நேரம் டிவி யில் ஏதாவது நல்ல நிகழ்சிகள் இருக்கிறதா என்று ஒவ்வொரு சேனல்களாக துரத்தியடித்துக் கொண்டிருக்கையில் எதோ ஒரு சேனலில் கரையேற முடியாமல் நீந்திக் கொண்டிருந்த "சுறா" படம்..(அடுத்த சேனலில் "சிங்கம்" சீறிக்கொண்டிருந்தது)


இவ்வாறு அன்று நடந்த ஒவ்வொரு சம்பவங்களும் மறக்க முடியாதவைகளாகவே அமைந்தாலும் எந்த இழப்புமின்றி கடந்து சென்றது இவ்வருட தீபாவளி..

"ஜோதி" - ll



நான் எதற்காக ஜோதியை தேடி போகிறேன் என்று தெரியாதவர்களுக்கு.. "ஜோதி" முதல் பாகம்...
><><><><><><><><>





என்றும் எப்போதும் சகஜமாக செல்லும் இடமாக இருந்தாலும் இந்த முறை பதற்றமும், படபடப்பும் என்னை சூழ்ந்து கொள்ள, ஓட்டமும் நடையுமாய் என்னையிளுத்து சென்ற கால்கள் சட்டென வேகம் குறைத்தன அவள் வகுப்பறை வாசல் வந்தவுடன்..

பொற்றாமரை குளத்தின் மத்தியில் பூத்திருக்கும் ஒற்றை தாமரை போல தோழிகளின் நடுவில் அமர்ந்திருந்த "ஜோதி"யை பார்த்ததும் நான் வந்து விட்டேன் என்பதை சொல்லாமல் சொல்வது போன்று சிரித்து விட்டு வெளியில் வந்து வராண்ட்டாவில் நிற்று வேடிக்கை பார்க்கத் துவங்கினேன்..

பாவை ஒருத்தி படுத்துறங்குவது போன்ற வளைவு நெளிவுகளுடன் காட்சியளிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை, மலையடிவாரத்தில் அழகாய் ஆரவாரமில்லாமல் இருக்கும் கிருஷ்ணன் கோவில், பச்சை பட்டுகளை பரவலாய் போர்த்தியது போன்ற வயல் வெளிகள், நடுவில் வானம் தொடும் உயரத்தில் கம்பீரமாய் நிற்கும் ஒற்றை ஆலமரம், அதனடியில் நிழல் காயும் ஓட்டு வீடு என ஏற்கனவே பார்த்து பழக்கப் பட்ட அனைத்தும் இன்றெனக்கு அழகாகவும், புதிதாகவும் தெரிந்தன.

இயற்கையின் இளமைக்கு முன் சிறு பிள்ளையாய் மாறிக்கொண்டிருக்கையில் கொலுசு சத்தத்தால் கவனம் கலைத்து இரண்டடி இடைவேளை விட்டு என்னருகில் நின்றவள், எதுமறியாதவள் போல் வானம் பார்த்தாள், நானோ இயற்கையை மறந்து என் இதயத்தை ரசிக்கத்துவங்கினேன்.

சிறிய தூக்கணாங் குருவிக் கூடு போன்று அவள் காதுகளில் தொங்கிகொண்டிருந்த ஜிமிக்கியின் அசைவுகளால் உருவான மெல்லிய இசையும். அவளின் தேகம் தழுவி கேசம் கலைத்த தென்றலின் சுகந்தமும் என்னை மெய் மறக்கச் செய்த தருணம் வார்த்தைகள் வந்தன என் வாழ்கையை முடிவு செய்ய..

உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஜெயந்த், உன்னோட பேச்சு, எல்லாத்தையும் சமாளிக்கிற சாமர்த்தியம், உன்னோட தைரியம், கேலி கிண்டல்,கலாட்டாக்கள், ஏதாவது சின்ன விசயங்களுக்காக கூட என்னை விட்டு கொடுத்து பேசாத குணம், எப்பவாவது என் முகம் வாடிப் போயிருந்தா நீ சொல்ற ஆறுதல்கள், என்னோட விசயங்களில் நீ எடுத்துக்கிற உரிமை இப்படி சொல்லிகிட்டே போகலாம் உன்னை எனக்கு பிடிக்கிறதுக்கான காரணங்கள். இந்த அன்பு நட்பா இல்ல காதலான்னு கேட்டா எனக்கு சொல்ல தெரியல.

ஒரு தெளிவான குளத்தங்கரையில் உட்க்கார்ந்து ஒரு சின்ன கல்லை தண்ணியில போட்டா அழகான வட்டங்களா சலனங்கள் விரியும் இல்லையா, அது மாதிரி தான் நீ பண்ற ஒவ்வொரு விசயமும் என் மனசுல சலனத்த உண்டாக்கும், அந்த சலனம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அந்த சலனங்கள் கரையை தொடத் தொட மறைஞ்சிடும்.. ஆனாலும் கொஞ்ச நேரம் உயிர் வாழும் அந்த சந்தோசம் போதும் ஜெயந்த் எனக்கு.

நான் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. சிறிய மௌனத்திற்கு பின் தொடர்ந்தாள்..

ஜெயந்த் உனக்கும் எனக்கும் நிறைய கடமைகள் இருக்கு, உன்னை பெற்றவங்களும், என்னை பெற்றவங்களும் எவ்வளவு எதிர்பார்ப்போடு நம்மை படிக்க அனுப்பியிருப்பாங்க.? எத்தனை கனவுக் கோட்டை கட்டி வச்சிருப்பாங்க? முதல்ல அவங்க எதிர்பார்ப்புகளை பூர்த்தி செஞ்சு ஒரு நல்ல நிலைக்கு வருவோம்.

இப்போ நமக்கு 21 வயசாகியும் அப்பா அம்மா கைய புடிச்சுகிட்டு தான் நடக்குறோம், இந்த பருவத்தில உனக்கும் சரி எனக்கும் சரி பெற்றவங்களோட துணை வேணும் ஜெயந்த். முதல்ல நல்லா படிச்சு, அதுக்கேற்ற மாதிரி ஒரு நல்ல வேலைய தேடி அம்மா அப்பாவை நம்ம கையை புடிச்சு நடக்க வைப்போம், நாம் அவங்களுக்கு துணையா இருப்போம்.

இது எதுக்குமே அன்பு, காதல் எதுவானாலும் சரி நமக்கு பாரமா இருக்கக் கூடாது.

நான் இப்போ ரொம்ப தெளிவா இருக்கேன்.


நேற்றைக்கு கேட்டது மாதிரியே உன் ஆசைப்படி வாழ்க்கை முழுவதும் உனக்கு துணையாகவோ இல்லை ஒரு நல்ல தோழியாகவோ கண்டிப்பா வருவேன்.


ஜெயந்த் நிஜமாகவே I Like U much more than Anything.... என்று சொல்லி விட்டு வேகமாக நடந்து சென்று விட்டாள்..

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்..

அவளும் மறைந்தாள், அவளுருவமும் மறைந்தது...

நானும் திரும்பி நடக்கத் துவங்கினேன்..

நான் வரும் போது இருந்த படபடப்பும், பதற்றமும் என் நடையில் இல்லை, தூரமாய் தெரிந்த மலையும், கோவிலும், ஆலமரமும், ஓட்டுவீடும் இன்னும் அழகாய் தெரிந்தன.