Showing posts with label மழையாலானவை. Show all posts
Showing posts with label மழையாலானவை. Show all posts

கவிதைகளல்லாதவை 1.2

பாதி நனைந்தும் நனையாமலும் 
தலை சிலிர்த்து நீர் தெறிக்க
பாய்ந்து வந்த  பூனை
வாசலில் ஆளொன்று
அமர்ந்திருக்கக் கண்டு
மிரண்டபடி மீண்டும்
மழை நோக்கி பின்வாங்க

தான் ஏதுமறியாதவர் போலெழுந்து
அவ்விடம் விட்டு நகர்ந்ததும்
பவ்யமாய் நடந்து
வெதுவெதுப்பான ஓரிடத்தை
அப்பூனை தனதாக்கிக்கொள்ள
புன்சிரிப்புடன்
மீண்டும் வாசலில் சென்றமர்ந்து
மழை ரசிக்கத் துவங்குகிறாள்
அச்சிறுமி

நீங்கள் வாசிக்க காத்திருக்கும்
கவிதை
இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது...

மழை தின்ற கடைசிக்கவிதை



உனக்கான கடைசிக்கவிதையை
எழுதலாமென வந்தமரும் வேளையில் 
அழையா விருந்தாளியாய் 
யன்னல் முட்டி உள்புகுந்து 
தன் வருகையை பதிவு செய்கிறது 
மழை

காலம் சில கடந்தும் 
ஒற்றைப் புள்ளியை மட்டுமே 
உள்வாங்கியிருந்த காகிதத்தில் கவிதைக்காய் 
சேகரித்த வார்த்தைகளைனைத்தையும் 
குவித்து வைத்து 
நம் முதல் சந்திப்பில் 
நீ எனக்கு பரிசளித்த 
பேனாவை துணைக்கமர்த்திச் செல்கிறேன்
மழை ரசிக்க 

நீ நனைந்தது 
உன்னால் நான் நனைந்தது 
மழையிரவு
மழை முத்தம் 
மழை பயணங்கள்  என 
மழையோடான நம்முறவை 
அசைபோட்டபடி நிற்கிறேன் நான் 

வந்த வேலை முடிந்ததென 
கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை 
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது 
மழை 

மீண்டும் உனக்கான கவிதையை 
தொடரலாமென வந்தமர்கிறேன் 
நான் 
மழை ரசித்த கணத்தில் 
மெளனமாய் வந்து 
வார்த்தைகளை திருடி 
சாட்சிக்காய் சில துளிகளை 
தூவிச் சென்றிருக்கிறது 
மழை...


ஆகையால் உனக்காகன 
தொடரலாம்...

R-I-P - மழையாலானவை



இரவை எப்படியாவது துரத்திவிடலாம் என்ற முனைப்புடன் கருமையை துளைத்துக் கொண்டு மண் நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருக்கின்றன மழை எனும் மகா அஸ்திரங்கள், தூறலாய் ஆரம்பித்த பொழுதில் ஆனத்தமாய் மண் வீசிய வாசனைகளை முகர்ந்து, அப்போதையில் பெய்யான பெய்து அம்மண் மீதே புரண்டோடிக்கொண்டிருக்கிறது பெருமழையொன்று..

துளியாய் துவங்கி தூறலாய் முடிந்தாலும், தூறலாய் ஆரம்பித்து பேயாட்டம் ஆடி ஓய்ந்தாலும், தட்டி எழுப்பும் மண் வாசனையோடு அடி மனதில் ஆழத்தில் புதைத்து வைத்திருக்கும் நினைவுக்குப்பைகளையும் மனக்காற்றில் வீசியடித்துவிட்டு செல்ல மறப்பத்தில்லை இந்த மழையெனும் மாயக்காரி.

வார்த்தைப் புழுதிகள் போக்கிடம் அறியாமல் மனக்காற்றில் சுற்றியலையும் வேளைகளில் தான், நான் வேறுவழியின்றி அவற்றை காகிதங்களிலோ, கணிணிகளிலோ கவிதைகள் என்ற பெயரில் சேகரிக்கத் துவங்குகிறேன். எத்தனை சிரத்தையுடன் அவ்வார்த்தைப் புழுதிகளை சேகரித்தாலும் அறிந்தோ அறியாமலோ சில வார்த்தைகளை எப்போதும் தவறவிட்டு விடுகிறேன்.

நான் இக்கணமும் அந்த வார்த்தைப் புளுதிகளைத்தான் சேகரித்துக்கொண்டிருக்கிறேன், வழக்கம் போலவே சிலவற்றை தவரவிட்டுக்கொண்டே.ஆகையால் இன்றும் கை, கால் இழந்து ஊனமுற்ற கவிதைகள் பிறக்கலாம். எல்லாம் சரியாய் அமைந்து ஆரோக்கியமாய் பிறக்கும் கவிதைகளுக்கே இங்கே வாழ வழியில்லை என்பதால் என் ஊனக்கவிதைகளை கருணைக்கொலை செய்துவிடலாம் என்றிருக்கிறேன். அது உங்கள் பார்வையில் கொலையாகப்படினும் எனக்கதில் ஆட்சேபனைமொன்றுமில்லை.

பெரும்பாலும் இதனை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கையில் என் ஊனக்கவிதைகள் உயிரற்று சடலமாகியிருக்கலாம், ஆகையால் இப்போது நீங்கள் உங்களை கண்களை மூடி என் கவிதைகளுக்காக சில நொடிகளாவது அஞ்சலி செலுத்திவிடுங்கள்.

இனிவரும் ஏதேனும் மழைநாட்களில் என்றேனும் என் ஊனக்கவிதைகள் உங்கள் மனக்கதவுகளை தட்டினால் பதற்றத்துடன் என்னைத்தேடியலைந்து உங்கள் நேரத்தை விரயமாக்காமல் அவற்றை கொன்று புதைத்துவிட்டு எனக்கு சொல்லியனுப்புங்கள், நான் இங்கிருந்தபடியே அஞ்சலி செலுத்துகிறேன் என் மழைக்கவிதைகளுக்கு...

ஆமென் :(.




படம் : இணையத்திலிருந்து

பெருமழைக்காலம் - மழையாலானவை




து
ளி
து
ளியாய்
தன்னைத் தொலைத்துக்கொண்டிருந்த
மழையை
ரசித்துக்கொண்டிருந்தவள்,
பொறுமையிழந்து 
மெதுவாய் சாரளம் திறந்து
கைநீட்டி துளி தொட ஆரம்பித்த,
அடுத்த கணத்தில்
அதற்க்காகவே காத்திருந்தது போலவே
பெய்யெனப் பெய்யத் துவங்குகிறது
பெருமழையொன்று...

படம் : இணையத்திலிருந்து

மழையின் விழுதுகள்..




தென்றலை துணைக்கழைத்து 
சா
ரம் திறந்து 
மெதுவாய் மெலிதாய் 
உள்நுழைகின்றன 
மழையின் விழுதுகள் 

இவர்களெப்படித்தான் 
அறிகிறார்களோ 
அவள் 
என்னறை நுழைவதை...

♦♦

ன்னல் வழியாய் 
மெதுவாய் நுழைந்து 
வெட்க்கத்துடன் உள்ளே வருகின்றன 
மழைத் துளிகள் சில 

முன்பொரு மழைநாளில் 
என்னறை ஜன்னலில் அவள் நின்று 
மழை ரசித்த 
ஞாபகத்தில் வந்திருக்கலாம் 

அடுத்த மழைக்கும் 
வரக்கூடும் துளிகள் சில 
அவளைத் தேடி.. 

♦♦

சாரம் வழியாய் சன்னமாய் 
கசிந்து வருகிறது 
எப்போதுமவள் விரும்பிக்கேட்கும் 
மெல்லிசையொன்று 

வெளியில் 
கொஞ்சம் கொஞ்சமாய் 
உருவம் தொலைக்கிறது 
சிறு மழையொன்று 
பெருமழையாய் 

உள்ளில் 
சத்தமே இல்லாமல் சலங்கை கட்டி 
பேயாட்டம் ஆடத் தொடங்குகின்றன 
அவளுடனான 
மழைக்கால நினைவுகள்.. 

♦♦