Showing posts with label உனக்கானவை சில. Show all posts
Showing posts with label உனக்கானவை சில. Show all posts

நீ அல்லாத நீ !

ரயில் ஜன்னலோர இருக்கையிலிருந்து
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் பெண்

பஸ்ஸில் நடத்துனரிடம்
மீதி ஐம்பது காசுக்காக சண்டையிட்டுக்கொண்டிருக்கும்
பெண்

காதில் ஹெட்செட் பொருத்தி
பாடல் வெளியில் கேட்குமளவிற்கு சத்தம் வைத்து ரசித்துக் கேட்கும்
பெண்

தியேட்டரில் தனக்கு பிடித்த நடிகனை
சிறப்பு தோற்றத்தில் பார்த்ததும்
பரவசத்தில் விசிலடிக்கும்
பெண்

நேரமாகிவிட்டதென காலையுணவு சரியாக உண்ணாமல்
அம்மாவிடமிருந்து திட்டு வாங்கிக்கொண்டே
வீட்டிலிருந்து வெளியிலிறங்கும்
பெண்

பள்ளி செல்லும் வாய்பேசா சிறுகுழந்தைக்கு
தினமும் மறவாமல் ஒரு சாக்லெட்டும்
கூடவே மறவாமல் ஒரு முத்தமும் பரிமாறும்
பெண்

போக்குவரத்து நெரிசலில்
தன் ஸ்கூட்டியை முன்னால் நின்ற வண்டியில்
உரசிவிட்டு மன்னிப்பு கேட்கும்
பெண்

அலைகள் துரத்தியும்
அலைகளை துரத்தியும் விளையாடும்
பெண்

பூங்காவில் ஊஞ்சலை கண்டவுடன்
தன் வயது மறந்து சிறுமியாகும்
பெண்

என
எல்லா நாளும்
எல்லா இடத்தும்
யாராவது ஞாபகப்படுத்திக் கொண்டேதானிருக்கிறார்கள்
நீயல்லாத உன்னை.

தொலைத்தும் தொலையா "இரவு"

April-02-2015


எல்லா இரவுகளைப்போலவும் இவ்விரவை என்னால் எளிதில் கடந்துவிட முடியுமென்று தோன்றவில்லை. கடந்த நான்கு வருடங்களாக உறக்கம் தொலைத்த இரவாகவே இருந்து வரும் இவ்விரவு இனியுள்ள காலங்களும் அவ்வாறே தொடரலாம். 

வருடந்தோறும் முயற்சிக்கிறேன்  எங்கனமேனும் இவ்விரவின் கருமையில் அவ்விரவு  நினைவுகளின் கரம் பற்றாமல் கடந்துவிட வேண்டுமென்று,

அவளெழுதிய கவிதைகளோ, அவளால் நான் எழுதிய கிறுக்கல்களோ எப்படியாவது கண்ணில் பட்டு விரதம் கலைத்து விடுகின்றன.

வெறும் கரும்போர்வையுடுத்திய  இவ்விரவைப்பற்றி  எழுதவோ சிலாகிக்கவோ என்ன  இருக்கிறதென்று பலமுறை யோசித்ததுண்டு அவ்விரவை நான் நானல்லாது கடக்கும் வரை

இரவு என்பது தொடக்கம் 
இரவு என்பது முடிவிலி
இரவு என்பது தொடர்ச்சி
இரவு என்பது துன்பம்  
இரவு என்பது இன்பம் 
இரவு என்பது இழப்பு
இரவு என்பது கொலைக்களம்
இரவு என்பது காமக்காடு 
இரவு என்பது காதல்
இரவு என்பது நல்ல ஆசான் 
இரவு என்பது வலி
இரவு என்பது துரோகம்

என்னை முதன்முதலில் தற்க்கொலைக்கு தூண்டியதும், 
என் முகம் தாடிக்கு பொருத்தமாக ஆரம்பித்ததும் 
காதலை தொலத்ததும் 
காதல் களைந்து எழுத ஆரம்பித்ததும் 
கடைசிக்கவிதைகள் ஆரம்பமானதும் 
கடைசியாய் சிரித்ததும் 
கண்ணீர் ஒழித்து வைத்து அழுததும்

என்று இரவு என்னில் எல்லாமுமாய் நின்றது அவ்விரவிலிருந்து தான். 

இவ்வொரிரவை கடப்பதென்பது எனக்கு அவ்வளவு எளிதான காரியமல்ல, நாட்களைக் கொன்று  தின்றபடி வருடங்கள் பல நகர்ந்தாலும் வருடந்தோறும் இவ்விரவின் மூர்க்க குணம் மட்டும் மாறாமல் அப்படியே இருப்பது தான் கொஞ்சம் கலக்கமூட்டுகிறது.

இன்னுமென்ன இருக்கிறது இவ்விரவைப்பற்றியெழுத, இதற்கு மேலும் இதனைத்தொடர்ந்தால் தற்கொலை எண்ணத்தை  தூசு தட்ட வேண்டுமென்பதைத் தவிர....

மழை தின்ற கடைசிக்கவிதை



உனக்கான கடைசிக்கவிதையை
எழுதலாமென வந்தமரும் வேளையில் 
அழையா விருந்தாளியாய் 
யன்னல் முட்டி உள்புகுந்து 
தன் வருகையை பதிவு செய்கிறது 
மழை

காலம் சில கடந்தும் 
ஒற்றைப் புள்ளியை மட்டுமே 
உள்வாங்கியிருந்த காகிதத்தில் கவிதைக்காய் 
சேகரித்த வார்த்தைகளைனைத்தையும் 
குவித்து வைத்து 
நம் முதல் சந்திப்பில் 
நீ எனக்கு பரிசளித்த 
பேனாவை துணைக்கமர்த்திச் செல்கிறேன்
மழை ரசிக்க 

நீ நனைந்தது 
உன்னால் நான் நனைந்தது 
மழையிரவு
மழை முத்தம் 
மழை பயணங்கள்  என 
மழையோடான நம்முறவை 
அசைபோட்டபடி நிற்கிறேன் நான் 

வந்த வேலை முடிந்ததென 
கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை 
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது 
மழை 

மீண்டும் உனக்கான கவிதையை 
தொடரலாமென வந்தமர்கிறேன் 
நான் 
மழை ரசித்த கணத்தில் 
மெளனமாய் வந்து 
வார்த்தைகளை திருடி 
சாட்சிக்காய் சில துளிகளை 
தூவிச் சென்றிருக்கிறது 
மழை...


ஆகையால் உனக்காகன 
தொடரலாம்...

R-I-P - மழையாலானவை



இரவை எப்படியாவது துரத்திவிடலாம் என்ற முனைப்புடன் கருமையை துளைத்துக் கொண்டு மண் நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருக்கின்றன மழை எனும் மகா அஸ்திரங்கள், தூறலாய் ஆரம்பித்த பொழுதில் ஆனத்தமாய் மண் வீசிய வாசனைகளை முகர்ந்து, அப்போதையில் பெய்யான பெய்து அம்மண் மீதே புரண்டோடிக்கொண்டிருக்கிறது பெருமழையொன்று..

துளியாய் துவங்கி தூறலாய் முடிந்தாலும், தூறலாய் ஆரம்பித்து பேயாட்டம் ஆடி ஓய்ந்தாலும், தட்டி எழுப்பும் மண் வாசனையோடு அடி மனதில் ஆழத்தில் புதைத்து வைத்திருக்கும் நினைவுக்குப்பைகளையும் மனக்காற்றில் வீசியடித்துவிட்டு செல்ல மறப்பத்தில்லை இந்த மழையெனும் மாயக்காரி.

வார்த்தைப் புழுதிகள் போக்கிடம் அறியாமல் மனக்காற்றில் சுற்றியலையும் வேளைகளில் தான், நான் வேறுவழியின்றி அவற்றை காகிதங்களிலோ, கணிணிகளிலோ கவிதைகள் என்ற பெயரில் சேகரிக்கத் துவங்குகிறேன். எத்தனை சிரத்தையுடன் அவ்வார்த்தைப் புழுதிகளை சேகரித்தாலும் அறிந்தோ அறியாமலோ சில வார்த்தைகளை எப்போதும் தவறவிட்டு விடுகிறேன்.

நான் இக்கணமும் அந்த வார்த்தைப் புளுதிகளைத்தான் சேகரித்துக்கொண்டிருக்கிறேன், வழக்கம் போலவே சிலவற்றை தவரவிட்டுக்கொண்டே.ஆகையால் இன்றும் கை, கால் இழந்து ஊனமுற்ற கவிதைகள் பிறக்கலாம். எல்லாம் சரியாய் அமைந்து ஆரோக்கியமாய் பிறக்கும் கவிதைகளுக்கே இங்கே வாழ வழியில்லை என்பதால் என் ஊனக்கவிதைகளை கருணைக்கொலை செய்துவிடலாம் என்றிருக்கிறேன். அது உங்கள் பார்வையில் கொலையாகப்படினும் எனக்கதில் ஆட்சேபனைமொன்றுமில்லை.

பெரும்பாலும் இதனை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கையில் என் ஊனக்கவிதைகள் உயிரற்று சடலமாகியிருக்கலாம், ஆகையால் இப்போது நீங்கள் உங்களை கண்களை மூடி என் கவிதைகளுக்காக சில நொடிகளாவது அஞ்சலி செலுத்திவிடுங்கள்.

இனிவரும் ஏதேனும் மழைநாட்களில் என்றேனும் என் ஊனக்கவிதைகள் உங்கள் மனக்கதவுகளை தட்டினால் பதற்றத்துடன் என்னைத்தேடியலைந்து உங்கள் நேரத்தை விரயமாக்காமல் அவற்றை கொன்று புதைத்துவிட்டு எனக்கு சொல்லியனுப்புங்கள், நான் இங்கிருந்தபடியே அஞ்சலி செலுத்துகிறேன் என் மழைக்கவிதைகளுக்கு...

ஆமென் :(.




படம் : இணையத்திலிருந்து

பெருமழைக்காலம் - மழையாலானவை




து
ளி
து
ளியாய்
தன்னைத் தொலைத்துக்கொண்டிருந்த
மழையை
ரசித்துக்கொண்டிருந்தவள்,
பொறுமையிழந்து 
மெதுவாய் சாரளம் திறந்து
கைநீட்டி துளி தொட ஆரம்பித்த,
அடுத்த கணத்தில்
அதற்க்காகவே காத்திருந்தது போலவே
பெய்யெனப் பெய்யத் துவங்குகிறது
பெருமழையொன்று...

படம் : இணையத்திலிருந்து

கிழிக்கப்பட்ட பக்கங்கள் - என் டைரியிலிருந்து



 April-02-2011
எண்ணங்களிலும் எழுத்துக்களிலும் உன்னை மட்டுமே நினைக்க வைத்து நீ என்னை ம(று)றந்து போன பின்னரும் என் உடம்பிலுள்ள எண்ணிலடங்கா செல்களில் ஓரிரு செல்களிலாவது உந்தன் நினைவுகள் நிழல் போல ஒட்டியிருப்பதால் உன்னை ஒரேடியாக ஒதுக்கித்தள்ள முடியாமலும், அதே சமயம் ஒட்டி உறவாடவும் முடியாமல் என் விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம் என எல்லாவற்றையும் இங்கே ஒரு ஓரமாக கொட்டி வைக்கிறேன்.  என்றேனும் ஒரு நாள் உன் கண்ணில் பட்டு என் எழுத்துக்கள் உயிர்த்தெழும்  அல்லது மோட்சம் அடையும் என்ற நம்பிக்கையில்....

உனக்காக கடிதம் எழுதும் முயற்ச்சியில்  வெற்றுக் காகிதங்களுடன் போட்டியிட்டு ஒரு புள்ளி கூட வைக்காமல் தோல்வியுடனே திரும்பத் துவங்கி நாட்கள் நூறு தன்னை மாய்த்துக் கொண்டு விட்டன. எனக்கு எழுத கற்றுக்கொடுத்தவள் நீ, உன்னை பற்றி எழுதுவதென்றால் எப்போதும் போல ஏதாவது சும்மா கிறுக்கி வைத்து விட முடியுமா என்ன !!!

உனக்கும் எனக்குமான அறிமுகத்தை நான் இங்கே சொல்லி தான் நீ அறிய வேண்டுமென்றில்லை. உன்னை காதலிக்க வழியில்லாமல் போனதால் உன்னை எனக்கு அறிமுகம் செய்த எழுத்துக்களை காதலிக்க கற்றுக்கொண்டுவிட்டேன். அவற்றை நான் வெறுத்தொதுக்கினாலன்று என்னை தனிமையில்  விட்டு சென்று விடாது.  இப்போதெல்லாம் என்னுடன் நீயில்லாத குறையை இவ்வெழுத்துக்கள் தான் ஓரந்தள்ளி ஒழித்து வைக்கின்றன. ஆனாலும் நான் உன்னை நினைப்பதற்கு மறப்பதில்லை.

மறந்தால் தானே உன்னை நினைப்பதற்கு நான் செய்யும் ஒவ்வொரு செயல்கும் உன்னை தான் நினைவூட்டிக் கொண்டே தான் இருக்கின்றன. இப்போது என்னிடம் இருப்பவையெல்லாம் உன்னுடையவை தான். ஒவ்வொன்றும் உன்னிடமிருந்து கற்றுக்கொண்டது தான். உனக்கு தெரியுமா என்று தெரியவில்லை. வீட்டில் நான் இப்போது  மிகவும் நல்ல பிள்ளையாகிவிட்டேன்.  என்னில் நிறைய மாற்றம் இருக்கிறது என்கிறார்கள், பெரியவர்களை மதித்து நடந்து கொள்கிறேனாம்யாரிடமும் எதிர்த்து பேசுவதில்லையாம், வீட்டு நிர்வாகங்களை கூட நான் நன்றாக பார்த்து கொள்கிறேனாம், என்னை மெச்சுகிறார்கள் பெற்றோர்கள். அவர்கள் இதை சொல்லும் போதெல்லாம் என்னிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே வெளிப்படுகிறது.  கொஞ்சம் கொஞ்சமாய் வார்த்தைகளால் வடிவமைத்து என்னுள் பல மாற்றங்கள் செய்த உனக்கல்லவா இந்த பாராட்டுகள் சேர வேண்டும். 

ஒரு தாயின் பொறுமை உனக்கு. இல்லையென்றால் யாருக்குமே உதவாமல் இருந்த இந்த களிமண்ணை பக்குவமாய் பிடித்து ஒரு சிலையாக்கியிருக்க முடியமா..  இந்த களிமண்ணிலும் காதல் கனியச் செய்தவள் நீ. கவிதைகள் கற்று தந்தாய். கவிதையினூடே காதலிக்கவும் கற்று தந்தாய்.

நீ என்னிடம்  காதலை கூறிய நாள் உனக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்கு நினைவிருக்கிறது. இந்த சொல்லை கேட்ப்பதற்க்காகத் தானா நான் பிறந்தேன் என்று நினைத்து கொண்ட அக்கணம் என்னுடல் இவ்வுலகம் விட்டு பிரியும் வரை மறவாது கண்மணி. ஈரம் வேண்டி வெகுநாள் காத்திருந்த மண் பெய்யும் மழைத்துளிகளை உள்வாங்கிக்கொள்வது போல உன் வாயிலிருந்து உதிர்ந்த அந்த வார்த்தைகளை உள்வாங்கி பத்திரப்படுத்தி வைத்துக்கொன்டது உன்னைத்தவிர எவரும் நுழைய முடியாத என் இதயக் கருவறை.

ஒவ்வொரு ஆணும் காதலிடமும் காதலியிடமும் கோழைகள் தான் என்பதை அக்கணம் நானறிந்து கொண்டேன். என்றேனும் உள்ளத்தில் உள்ளதை உள்ள படி சொல்வாயா என்று ஏங்கியிருந்த நாட்களில் எல்லாம் என்னை மெலும் ஏங்க வைத்தாய், ஒரு வழியாய் தைரியத்தை தத்தெடுத்து உன்னிடம்  இன்று சொல்லியே ஆக வேன்டும் என்று வந்த நாளில் என்னையும் முந்திக்கொன்டு நீ காதலை முன் மொழிந்த  அந்த கணத்தில் என் இதயத்துடிப்பின் வேகத்தையும், நான் சொல்ல வந்ததை நீ சொல்லிவிட்டபடியால் என்ன சொல்வதென்று அறியாமல் தடுமாறிப் போய் குளறியபடி வார்த்தைகளை மறந்த என் நாவையும் இன்று நினைத்தாலும் மனதிற்க்குள் எதோ இனம் புரியாத உணர்வு ஒன்று என்னை உருக்குலைக்கிறது.  

அந்நாள் வரை காதல் கவிதைகள் கண்டால் "இதை எழுதியவன் நிச்சயமாக ஒரு பைத்தியமாகத் தானிருப்பான் என்று சொல்லி வந்த என்னுள்ளம் கவிதைக்காக வையகமெங்கும் வார்த்தைகளை தேடியலைந்து சேகரிக்கத் துவங்கியதையும் நான் உண்ர்தேன். சில நாட்களில் உனக்கான கவிதைகளுக்கு தமிழில் வார்த்தைகள் போதாது என்பதையும் தெரிந்து கொன்டேன். ஒருவனை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது காதல்.
ஆணை பெண்ணாக்கும் வித்தை காதலுக்கு மட்டுமே தெரியும் என்று நினைக்கிறென். ஆம்.. பல தடவை காதல் முன்னும் அவள் கண்கள் முன்னும் நான் ஒரு ஆண் என்பதை மறந்திருக்கிறேன். ஆண்மைக்குள்ளும் அச்சம் மடம், நாணம் என எல்லா குணங்களும்    ஒருவருமறியாமல் ஏன் நானே கூட அறியாமல் ஒளிந்திருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டேன். ஆனால் அது நான் உன் கண்பார்த்து பேசும் தருணங்களில் மட்டும் தான் தலைகாட்டி என்னை தடுமாற வைக்கிறது.  

பள்ளிக்கு முன்னும், கோவில் வாசலிலும், காலேஜ் பஸ் ஸ்டாப்களிலும் பிச்சைக்காரர்களுக்கு போட்டியாய் நிற்ப்பது காதல் எனும் பேய் பிடித்து பிசாசுகளுக்காக காத்திருக்கும் பெண் பித்தர்களாக தான் இருக்கும் என்று நண்பர்களிடம் சொல்லி சிரிக்கும் போது எனக்கு தெரிந்திருக்கவில்லை இப்படி உனக்காக நானும் ஒரு நாள் கோவில் வாசலிலும், பஸ் ஸ்டாப்பிலும் உனக்காக காத்திருக்க போகிறேன் என்று. ஆனால் நான் ஒரு பிசாசுக்காக காத்திருக்கவில்லை, தேவதைகளும் பொறாமை கொள்ளுமளவு அழகுடைய தேவதைக்காக காத்திருந்தேன், ஒரு பெண் பித்தனாக காத்திருக்கவில்லை. ஒற்றை பார்வையில் சித்தம் கலங்க செய்து இனி என் வாழ்வின் மொத்தமும் அவள் தான் என்று நினைக்க வைத்த என் தேவைதையின் ஒரு பக்தனாக காத்திருந்தேன். 

அரை மணி நேரம் தாமதனாய் வந்த நண்பன் அதற்கு எவ்வளவோ காரணங்கள் சொல்லியும் சமாதானமாகாமல் கோபித்துக்கொண்ட நான், காலையில் வருவாய் என்று உனக்காக காத்திருந்த ஒரு நாள் அரை நாள் தாமதமாய் வந்த உன்னிடம் அதிர்ந்து கூட பேசாமல் அடங்கிப்போனதன் அர்த்தம் தான் காதல் என்று அழகாக அழுத்தி சொன்னது என்னுள்ளம்.

உன் வருகைக்காக நான் காத்திருக்கும் தருணங்களில் என்னை பற்றிக்கொள்ளும் தனிமையை துரத்திவிட்டு உன் நினைவுகள் வந்து ஒட்டிக்கொள்ளும். ஒட்டிக்கொண்ட நினைவுகள் ஒரு ஓரமாய் ஒதுங்கி நிற்காமல் என்னுள் நான் ஒழித்து வைத்திருக்கும் வார்த்தைகளை ஓன்று சேர்த்து உன்னை பற்றி எழுதத் துவங்கும். உன்னை பற்றி என்ன எழுதினாலும் அவை கவிதையாகவே உருமாறிவிடுகின்றன.



"காத்திருப்புகள் வலியைத்தான் தருமாம், 
உனக்கான காத்திருப்புகளனைத்தும்  
எனக்கு 
கவிதைகளை மட்டுமே தருகின்றன".


என்றேனும் ஒரு நாள் உன் கண்ணில் பட்டு என் எழுத்துக்கள் உயிர்த்தெழும்  அல்லது மோட்சம் அடையும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்...


கவிதை தேவதைக்கானது..




நேற்றைய பொழுதில் எழுதி முடித்த கவிதையை செப்பனிட நேரம் கொஞ்சமதிகமானதால் நள்ளிரவு தாண்டி நித்திரைதேவியின் மடியில் முகம் புதைத்து கனவில் காலடியெடுத்து வைத்த அடுத்த கணத்தில் ஏனித்தனை தாமதமென்று கண்களில் கோபம் கொப்பளிக்க என் முன்னால் வந்து குதித்தாள் என் கனவு தேவதை,

கெஞ்சியும், கொஞ்சியும் பார்த்த பின்னரும் சினம் தணியா தேவதையின் கண்களின் கருவிழி நிறமும், கடைவாய்ப்பற்களும் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறுவதை கவனித்தேன், இன்னும் தாமதமானால் தேவதையவள் ரட்ஷஸாக உருமாறி விடுவாள் என்பது ஏற்கனவே நானறிந்த விசயமானதால் தாமதிக்காமல் என் வலக்கரம் கொண்டு சிரம் பற்றி, இடக்கரம் கொண்டு இடை பற்றி அவளிதழொற்றி உயிருஞ்ச, ரட்ஷஸ் காணமல் போக தேவதையானவள் வெட்கமுடுத்தி விலகி நின்றாள் கனவுகலத்தையும் மறந்து,

தேவதை  தேவதையாகத்தான் இருக்கிறாள் என்று உறுதியானப்பின் உனக்காய் கவிதையொன்றை எழுதி எடுத்து வைத்திருக்கிறேனென்றேன், மெல்லிடை அசைத்து கவிதையாய் நடந்து என்னருகில் வந்து என் கிறுக்கலை (அவள் முன் அவளைத்தவிர வேறேதும் கவிதையென கொள்ளப்படாது) கையிலேந்தி, என் கண்களுக்கு முன் அவள் வேல்விழிகளை நிறுத்தி "பொழுது புலர இன்னும் ஒரு நாழிகையே இருக்கிறது நானிப்போது செல்கிறேன் நாளைய கனவில் உனக்கான கவிதையுடன் மீண்டும் வருகிறேன் என்று கூறி என் நெற்றியில் முத்தம் பதித்த அடுத்த கணம் என் காது கிழித்த அலறல சத்தம் கேட்டு திடுக்கிட்டு கண்விழித்தேன் நான், எமனாய் என்னருகில் அலாரம் என்ற பெயரில் அலறிக்கொண்டிருந்தது என் அலைபேசி.

இன்றும்  வரலாம் என் தேவதை எனது அல்லது எனக்கான கவிதையுடன்.. 


# படம் இணையத்திலிருந்து

கடைசியாய் ஒரு கடைசிக்கவிதை...



மெளனம் தவிர்
கண்ணீர் துடை 
மெல்ல எழு
நாட்க்குறிப்பை திற
கூர்முனை பேனா எடு 
கவிதையொன்றை துவங்கு 
பாதியில் நிறுத்து 
பேனாவை 
கைகளுக்கு பின்னால் மறை 
என்னைப்பார் 
நெருங்கி வா 
கண்களில் காமம் காட்டு 
கட்டியணை
என்னை நான் மறக்க செய்
குறிபார் 
பேனாவை 
என் கழுத்தில் சொருகு 
அலற விடாமல் 
இதழ் மீது இதழ் பத்தி 
இறுக்கம் கூட்டி 
திமிறல் தவிர்
மெல்ல அடங்க 
மெதுவாய் ஒதுங்கு 
பேனாவை சரிபார் 
விட்ட கவிதையை 
மீண்டும் தொடர்

எனக்கான அந்த 
கடைசிக்கவிதையின் 
முடிவில் முற்றுப்புள்ளியொன்றை 
மறவாமல் என் 
உதிரம் தொட்டு வை  . 



காத்திருக்கும் காதல்..




உன்னைக் காண 
நானும்
என்னைக் காண 
நீயும் 
ஒருவரை ஒருவர் 
முந்திக்கொண்டு வந்தடைகிறோம் 
வழக்கமாய் நாம் சந்திக்கும் 
கொன்றை மரத்தடி 
பார்க் பெஞ்சருகில், 

அங்கு 
நமக்கு முன்னால் 
நம்மைக்காணும் ஆர்வத்தில் 
வந்து காத்திருக்கிறது 
நம் காதல்.. 

மழையின் விழுதுகள்..




தென்றலை துணைக்கழைத்து 
சா
ரம் திறந்து 
மெதுவாய் மெலிதாய் 
உள்நுழைகின்றன 
மழையின் விழுதுகள் 

இவர்களெப்படித்தான் 
அறிகிறார்களோ 
அவள் 
என்னறை நுழைவதை...

♦♦

ன்னல் வழியாய் 
மெதுவாய் நுழைந்து 
வெட்க்கத்துடன் உள்ளே வருகின்றன 
மழைத் துளிகள் சில 

முன்பொரு மழைநாளில் 
என்னறை ஜன்னலில் அவள் நின்று 
மழை ரசித்த 
ஞாபகத்தில் வந்திருக்கலாம் 

அடுத்த மழைக்கும் 
வரக்கூடும் துளிகள் சில 
அவளைத் தேடி.. 

♦♦

சாரம் வழியாய் சன்னமாய் 
கசிந்து வருகிறது 
எப்போதுமவள் விரும்பிக்கேட்கும் 
மெல்லிசையொன்று 

வெளியில் 
கொஞ்சம் கொஞ்சமாய் 
உருவம் தொலைக்கிறது 
சிறு மழையொன்று 
பெருமழையாய் 

உள்ளில் 
சத்தமே இல்லாமல் சலங்கை கட்டி 
பேயாட்டம் ஆடத் தொடங்குகின்றன 
அவளுடனான 
மழைக்கால நினைவுகள்.. 

♦♦


காதல் கொன்று ராகம் தின்பவள்..




மனம் கலைத்துக்களைந்த மனிதர்களால்
அரங்கம் நிரம்பியிருக்கிறது,
தானே செய்த இசைக்கருவியொன்றை
கையில் எந்தியிருக்கிறாள் அவள்
இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த
இசைக்கருவியில் என்
மூளையிலிருந்து இதயத்திற்கு வரும்
நரம்புகளை மட்டும் தனியாய்
பிரித்தெடுத்து நேர்த்தியாய்
வரிந்து கட்டியிருக்கிறாள்,
நரம்புகளை மீட்ட
விரலிடுக்குகளில்
என் நாவின் நுனியை
இதய வடிவில்
கத்தரித்து கவ்வியிருருக்கிறாள்,
கூச்சலும் குழப்பமுமாய்
குழுமியிருந்த அரங்கம்
உயிர் பிரியும் வேளையில் தோன்றும்
அமைதியை போல்
மௌனம் கொள்கிறது
அவள் இசைக்கருவியை கையிலேந்தி
வாசிக்க துவங்குகிறாள்
ஒரு சில துளிகளுடன்
மௌனமாய் ஆரம்பித்து
அதிகம் நீளாமல் ஆர்ப்பரித்து அடங்கும்
பெருமழையை போல ஒலிக்க ஆரம்பிக்கிறது
இசை என்ற பெயரில்
என் அலறல் சத்தம்,
அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி
அமைதியாய் அரங்கின் ஓரமாய்
கிடக்கிறது அவள்
முன்னெச்சரிக்கையாய் பறித்தெடுத்த
என் இதயம்
கூடவே துணையாய்
என் காதலும்.

"மழை"யாலானவை..



நீ அடங்க மறுத்த
பொழுதுகளைத்தான் ஞாபகப்படுத்துகிறது
ஒவ்வொரு அடை மழையும்.. 





என்றோ மழை நாளில் 
நீ வந்து சென்ற ஞாபகத்தை 
பத்திரமாய் பதித்து வைத்திருக்கிறது 
என் வீட்டு முற்றம் 
உன் காலடி சுவடுகளாய். .






பெய்யும் முதல் மழையில் 
மண் வாசம் வீசுமாம் 
எனக்கோ 
விழுகிற ஒவ்வொரு துளியிலும் 
உன்வாசமே வீசுகிறது 







கவிதைகள் கரையும் 
சிறு தூறல்களுக்கு 
கொஞ்சம் கூட 
சளைத்ததாய் இல்லை 
எங்கிருந்தோ காற்றில் 
ஆடியசைந்து வரும் 
சில இறகுகள்..







மழை 
எப்போதும் போல 
சுயம் தொலைக்காமல் 
மழையாகவே 
பெய்து கொண்டிருக்கிறது 
நான் தான் 
கரைந்து கொண்டிருக்கிறேன் 
துளி 
து
ளி
யா
ய்.







அஸ்தமனம் - விடியல் - கனவு


நான் என்ன  எழுதினாலும் அதற்கு நக்கலும் நையாண்டியுமாக எதிர்கவிதை எழுதுவதில் வல்லவர்கள் எனது நண்பர்கள். அதே போன்று  நண்பர்கள் இருவர்  நக்கல் நையாண்டி இல்லாமல் நாசூக்காய் எழுதிய கவிதைகளை இங்கே ..  



அஸ்தமனம் 

முற்று பெறாத நாளொன்றின்  
இறுதி நேரத்தில் வந்தவள் 
நட்டு வைத்துப்போன 
உயிர்ப்பூக்கும் செடி 
பிரசவித்த தலைப்பூவொன்றின் வாசம் 
கருமையைக் கவ்விப்பிடித்த இரவின் 
ஓரங்களை கிழித்துக்கொண்டு 
என் தூக்கம் கலைக்கிறது

நீங்காமல் நீளும் பல நினைவுகளுக்கு மத்தியில் 
நுரையீரல் தழுவும் ஆழப்புகை
நெஞ்சம் பற்றியெரியும் நாட்டு வாற்றுச்சாராயம் 
முன்னிலையில் முடிவெடுக்கிறேன் 

இந்த இரவும் அஸ்தமிக்கும் 
அக்ககணத்தில் அவள் 
கல்லறைக்கு பக்கத்திலிருக்கும் 
அந்த செடியும்.. 


விடியல் - எஸ்.கே  

தொடங்கி விடாத நாளொன்றின்  
வைகைறை நேரத்தில் வந்தவன் 
நட்டு வைத்துப்போன 
உயிர்ப் பூவொன்றின் 
மலர்ந்திடும் ஓசை 
வெண்மையைக் கவ்விப்பிடித்த விடியலின் 
கதிர்களை ஒருபுறம் தள்ளி
என் தூக்கம் கலைக்கின்றது

புத்தம் புதிதாய் நித்தம் நீளும் 
பல நினைவுகளுக்கு மத்தியில் 
நுரையீரல் முழுதும் தென்றலின் வாசம்
நெஞ்சம் பற்றித்தழுவும் வண்ணக் கனவுகள் 
முன்னிலையில் முடிவெடுக்கிறேன் 

இந்த விடியலும் தொடங்கும் 
அக்ககணத்தில் அவன் 
மனக் கோயிலுக்குள்ளிருக்கும் 
தூணாய் நான்...


கனவுகள் -  வைகை  

முற்று பெறாத நிமிடத்தின்
இறுதி நொடியில்  வந்தவள் 
நட்டு வைத்துப்போன 
கனவு பூக்கும்  செடி 
பிரசவித்த காதல்கனவின்  ஒளியில்
வெறுமையைக்  கவ்விப்பிடித்த மனதின்  
பாரங்களைக்  கிழித்துக்கொண்டு 
என் சோகம்  கலைக்கிறது

நினைவுக்குள்  நீளும் பல கனவுகளுக்கு மத்தியில் 
வெற்றுமார்பு தழுவும் உன் நினைவு
நெஞ்சத்தை நெகிழ்ச் செய்யும் உன் புன்னகை  
முன்னிலையில் முடிவெடுக்கிறேன்

இந்த கனவுகள் முற்றுப்பெறும் 
அக்ககணத்தில் அவள் 
கண்களுக்கு உள்ளிருக்கும் 
என்னைப்பற்றிய கனவுகளும்.......



உனக்கானவை சில - நிர்வாண நிலவு..


விரக்தியுடன் ரசிக்கிறேன் 
நான் ,
உன் நினைவுகளுடன்.. 


உனக்கானவை சில


நீ உபயோகித்து 
தூக்கியெறிந்த பொருட்களெல்லாம் 
எனக்கு பொக்கிஷமே, 
உன் மீதான என் 
காதலும்..









சிறு தூறலாய் விழுந்தாலும் 
சீராக பெய்கிறது மழை
அனுதினம் 
என் உயிரில் விழுந்தோழுகும் 
உன் நினைவுச்சாரல் போல ...









நிரம்பி வழிகிறது 
உனக்கான கவிதைகளால் 
எனது நாட்க்குறிப்பும் 
உன்னைப்பற்றிய நினைவுகளால் 
என் இதயமும்..