கவிதைகளல்லாதவை 1.2

பாதி நனைந்தும் நனையாமலும் 
தலை சிலிர்த்து நீர் தெறிக்க
பாய்ந்து வந்த  பூனை
வாசலில் ஆளொன்று
அமர்ந்திருக்கக் கண்டு
மிரண்டபடி மீண்டும்
மழை நோக்கி பின்வாங்க

தான் ஏதுமறியாதவர் போலெழுந்து
அவ்விடம் விட்டு நகர்ந்ததும்
பவ்யமாய் நடந்து
வெதுவெதுப்பான ஓரிடத்தை
அப்பூனை தனதாக்கிக்கொள்ள
புன்சிரிப்புடன்
மீண்டும் வாசலில் சென்றமர்ந்து
மழை ரசிக்கத் துவங்குகிறாள்
அச்சிறுமி

நீங்கள் வாசிக்க காத்திருக்கும்
கவிதை
இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது...