புகைப்படமாய் " என் தெய்வம் "




முந்நூறு நாள் என்னை
மடி சுமந்தவள் நீ...

ஈன்ற பின்னும் என்னை நீ
மடி இறக்கியதில்லை...

விழுந்தால், கை கொடுத்து தூக்கியதில்லை
நானே எழ வேண்டும் என்று,
ஒன்றரை வயதில் எனக்கு
தன்னம்பிக்கை கற்று கொடுத்தவள் நீ...

நான் பள்ளியில் இருந்த நேரத்தை விட,
எனக்காக பள்ளிவாசலில் நீ
காத்திருந்த நேரமே அதிகம்...

பள்ளிப்படிப்பு படிக்கவில்லை என்றேன்,
பக்குவமாக எடுத்து சொன்னாய் என்
பாதை மாறக்கூடாது என்று....

நான் தேவை என்பதை எல்லாம்
நீ வாங்கி தந்ததில்லை, ஆனால் என்
தேவை அறிந்து வாங்கித்தந்தாய்...

நீ அழுது பார்த்ததில்லை ஆனாலும்
கண்ணீர் கண்டிருக்கிறேன், நான் அழும் போது
உன் கண்களில்...

எனக்கு தெரிந்த உலகம் நீ,
உனக்கு உலகமே நான் தான்..

பொறியியல் படிக்க வேண்டுமென்றேன்,
பதிலேதும் சொல்லாமல் உன் பொன்
நகை விற்று படிக்கவைத்தாய்...

நான் காதலிப்பதை சொன்னேன்,
கவனத்தை சிதறவிடாதே என்றாய் .. கண்டிப்போடு

நான் இன்று பட்டம் பெறப்போகிறேன்,
சாதித்துவிட்டாய் என்கிறார்கள் என்
ஆசிரியர்களும், நண்பர்களும்..

எப்படி புரிய வைப்பேன் அவர்களுக்கு
சாதித்தது நான் இல்லை என்பதையும்

இந்த பட்டம் பெற
எனக்கு தகுதி இல்லை என்பதையும்..


புற்றுநோயை உன் புன்னகையால்
மறைத்த நீ...

இப்போதும் அதே
புன்னகையுடன் என் பூஜையறையில்

புகைப்படமாய் .......

என்னை பற்றி உங்களுக்காக


அறிமுகம் : -

நீங்கள் அறியாத முகம் என்பதால் நான் என்னை அறிமுகம் செய்வது என் அறிமுக கடமை.

நீங்க நினைக்கிற அளவுக்கு பெரிய ஆள் இல்லனாலும், 13 படங்களுக்கு துணை இயக்குனராகவும், ஒரு படத்தை நானே இயக்கவும் செய்துருகிறேன். ( அந்த படம் வெளி வரவில்லை ) மேலும் மூன்று குறும் படங்களையும் இயக்கிருகிறேன் . நான் கலை உலகிற்கு பழையவன் அனால் கணினி உலகிற்கு புதிவன்.

இப்படி எல்லாம் சொல்லி தான் உங்க கிட்ட என்னை அறிமுகபடுதனும்னா அப்படி ஒரு அறிமுகமே தேவை இல்லேங்க, ஆனாலும் என்னை பற்றி சொல்றது என்னோட கடமைங்க.....


என் பள்ளிக்காலம் : -

மழைக்கு கூட பள்ளிகூடம் பக்கம் போனதில்லைன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன், எப்போவாவது மழை வந்தால் வேற வழி இல்லாம பள்ளிக்கூடம் போவோம்.

என் கல்லூரி காலம் : -

என் வாழ்க்கையை திருப்பி போட்ட காலம் அது ( ஹலோ ரொம்ப ஓவரா கற்பனை பண்ணாதிங்க) கூட படிச்ச பொண்ணுக்கு ரூட் விட்டதால தான் என்னோட உடம்ப மட்டுமில்ல வாழ்க்கையையே புரட்டி போட்டுட்டு போனாங்க. ரொம்ப நல்லவங்க. ( நான் சைட் அடிக்க ஆரம்பிக்கும் போது எனக்கு தெரியாதுங்க அந்த பொண்ணுக்கு 2 அண்ணனுங்க, 4 தாய்மாமன் , 2 சித்தப்பா முக்கியமா அவளோட முறைபையன், சும்மா சொல்ல கூடாதுங்க பாரபக்ஷம் பாக்காம அடிச்சானுங்க அதிலயும் அந்த முறைபையன் இருக்கானே அடிக்ககூடாத இடத்திலல்லாம்........ இதுக்கு மேலே என்னாலே சொல்ல முடியலங்க ) அடுத்த நாளே கொடுத்தாங்க அவார்ட் இல்லேங்க டிஸ்மிஸ் லெட்டெர , இப்படி என்னோட காலேஜ் வாழ்க்கையும் .....

அப்புறம் என்னங்க என்னோட எல்லா செர்டிபிகட்ஸ் ( வெள்ளை பேப்பர்ல நானே எழுதிகிட்டது ) எடுத்துகிட்டு தெரு தெருவா வேலை தேடினேன். ஒரு பய புள்ளயும் வேல குடுக்கல. நீண்ட நாள் தேடுதல்ல ஒரு வேலை கிடைச்சுதுங்க ( மேனேஜர் போஸ்ட் எல்லாம் இல்லெங்க )
நல்ல வேலைங்க, இப்போ நல்லா இருக்கேன், இதோ உங்க கழுத்துல கத்தி வச்சிக்கிட்டு ........



இதுதாங்க நான்,, இன்னொரு சந்தோஷமான விஷயம்
நான் இப்போ படிச்சுகிட்டு இருக்கேன் காலேஜ்ல தான் , ஆனால் படிப்பது பாடத்தை மட்டுமல்ல உன்னையும், என்னையும், நம்மை தாங்கும் இந்த உலகத்தையும் ........

ஹலோ ஹலோ கொஞ்சம் இருங்க, நான் இன்னும் முடிக்கல


உங்களுக்கு என்ன தோணினாலும் அதை உங்க பொன்னான எழுத்துகளால் தெருவியுங்கள் ...
உங்கள் பொறுமைக்கு நன்றி ..........