"ஜோதி" - ll



நான் எதற்காக ஜோதியை தேடி போகிறேன் என்று தெரியாதவர்களுக்கு.. "ஜோதி" முதல் பாகம்...
><><><><><><><><>





என்றும் எப்போதும் சகஜமாக செல்லும் இடமாக இருந்தாலும் இந்த முறை பதற்றமும், படபடப்பும் என்னை சூழ்ந்து கொள்ள, ஓட்டமும் நடையுமாய் என்னையிளுத்து சென்ற கால்கள் சட்டென வேகம் குறைத்தன அவள் வகுப்பறை வாசல் வந்தவுடன்..

பொற்றாமரை குளத்தின் மத்தியில் பூத்திருக்கும் ஒற்றை தாமரை போல தோழிகளின் நடுவில் அமர்ந்திருந்த "ஜோதி"யை பார்த்ததும் நான் வந்து விட்டேன் என்பதை சொல்லாமல் சொல்வது போன்று சிரித்து விட்டு வெளியில் வந்து வராண்ட்டாவில் நிற்று வேடிக்கை பார்க்கத் துவங்கினேன்..

பாவை ஒருத்தி படுத்துறங்குவது போன்ற வளைவு நெளிவுகளுடன் காட்சியளிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை, மலையடிவாரத்தில் அழகாய் ஆரவாரமில்லாமல் இருக்கும் கிருஷ்ணன் கோவில், பச்சை பட்டுகளை பரவலாய் போர்த்தியது போன்ற வயல் வெளிகள், நடுவில் வானம் தொடும் உயரத்தில் கம்பீரமாய் நிற்கும் ஒற்றை ஆலமரம், அதனடியில் நிழல் காயும் ஓட்டு வீடு என ஏற்கனவே பார்த்து பழக்கப் பட்ட அனைத்தும் இன்றெனக்கு அழகாகவும், புதிதாகவும் தெரிந்தன.

இயற்கையின் இளமைக்கு முன் சிறு பிள்ளையாய் மாறிக்கொண்டிருக்கையில் கொலுசு சத்தத்தால் கவனம் கலைத்து இரண்டடி இடைவேளை விட்டு என்னருகில் நின்றவள், எதுமறியாதவள் போல் வானம் பார்த்தாள், நானோ இயற்கையை மறந்து என் இதயத்தை ரசிக்கத்துவங்கினேன்.

சிறிய தூக்கணாங் குருவிக் கூடு போன்று அவள் காதுகளில் தொங்கிகொண்டிருந்த ஜிமிக்கியின் அசைவுகளால் உருவான மெல்லிய இசையும். அவளின் தேகம் தழுவி கேசம் கலைத்த தென்றலின் சுகந்தமும் என்னை மெய் மறக்கச் செய்த தருணம் வார்த்தைகள் வந்தன என் வாழ்கையை முடிவு செய்ய..

உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஜெயந்த், உன்னோட பேச்சு, எல்லாத்தையும் சமாளிக்கிற சாமர்த்தியம், உன்னோட தைரியம், கேலி கிண்டல்,கலாட்டாக்கள், ஏதாவது சின்ன விசயங்களுக்காக கூட என்னை விட்டு கொடுத்து பேசாத குணம், எப்பவாவது என் முகம் வாடிப் போயிருந்தா நீ சொல்ற ஆறுதல்கள், என்னோட விசயங்களில் நீ எடுத்துக்கிற உரிமை இப்படி சொல்லிகிட்டே போகலாம் உன்னை எனக்கு பிடிக்கிறதுக்கான காரணங்கள். இந்த அன்பு நட்பா இல்ல காதலான்னு கேட்டா எனக்கு சொல்ல தெரியல.

ஒரு தெளிவான குளத்தங்கரையில் உட்க்கார்ந்து ஒரு சின்ன கல்லை தண்ணியில போட்டா அழகான வட்டங்களா சலனங்கள் விரியும் இல்லையா, அது மாதிரி தான் நீ பண்ற ஒவ்வொரு விசயமும் என் மனசுல சலனத்த உண்டாக்கும், அந்த சலனம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அந்த சலனங்கள் கரையை தொடத் தொட மறைஞ்சிடும்.. ஆனாலும் கொஞ்ச நேரம் உயிர் வாழும் அந்த சந்தோசம் போதும் ஜெயந்த் எனக்கு.

நான் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. சிறிய மௌனத்திற்கு பின் தொடர்ந்தாள்..

ஜெயந்த் உனக்கும் எனக்கும் நிறைய கடமைகள் இருக்கு, உன்னை பெற்றவங்களும், என்னை பெற்றவங்களும் எவ்வளவு எதிர்பார்ப்போடு நம்மை படிக்க அனுப்பியிருப்பாங்க.? எத்தனை கனவுக் கோட்டை கட்டி வச்சிருப்பாங்க? முதல்ல அவங்க எதிர்பார்ப்புகளை பூர்த்தி செஞ்சு ஒரு நல்ல நிலைக்கு வருவோம்.

இப்போ நமக்கு 21 வயசாகியும் அப்பா அம்மா கைய புடிச்சுகிட்டு தான் நடக்குறோம், இந்த பருவத்தில உனக்கும் சரி எனக்கும் சரி பெற்றவங்களோட துணை வேணும் ஜெயந்த். முதல்ல நல்லா படிச்சு, அதுக்கேற்ற மாதிரி ஒரு நல்ல வேலைய தேடி அம்மா அப்பாவை நம்ம கையை புடிச்சு நடக்க வைப்போம், நாம் அவங்களுக்கு துணையா இருப்போம்.

இது எதுக்குமே அன்பு, காதல் எதுவானாலும் சரி நமக்கு பாரமா இருக்கக் கூடாது.

நான் இப்போ ரொம்ப தெளிவா இருக்கேன்.


நேற்றைக்கு கேட்டது மாதிரியே உன் ஆசைப்படி வாழ்க்கை முழுவதும் உனக்கு துணையாகவோ இல்லை ஒரு நல்ல தோழியாகவோ கண்டிப்பா வருவேன்.


ஜெயந்த் நிஜமாகவே I Like U much more than Anything.... என்று சொல்லி விட்டு வேகமாக நடந்து சென்று விட்டாள்..

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்..

அவளும் மறைந்தாள், அவளுருவமும் மறைந்தது...

நானும் திரும்பி நடக்கத் துவங்கினேன்..

நான் வரும் போது இருந்த படபடப்பும், பதற்றமும் என் நடையில் இல்லை, தூரமாய் தெரிந்த மலையும், கோவிலும், ஆலமரமும், ஓட்டுவீடும் இன்னும் அழகாய் தெரிந்தன.

"ஜோதி"


"எலேய் மாப்பிள உன்ன ஜோதி கூப்பிட்டாளாம்டா.. உன்கிட்ட எதோ முக்கியமா பேசணுமாம்"

வாசலருகிலிருந்து வந்த அருணின் குரல் "மாப்பிளை பெஞ்ச்" என்ற பெருமை கொண்ட கடைசி பெஞ்சில் கவிதை என நினைத்து எதையோ கிறுக்கிக் கொண்டிருந்த என கவனத்தை கலைத்தது.. அவன் குரல் என செவிப்பறைகளை வந்தடைந்த அடுத்த கணம் நானறியாமல் நடக்கத்துவங்கின என் கால்கள் lllyear MECHANICAL Department லிருந்து ஏழு கிளாஸ் ரூம் தள்ளியிருந்த lllyear Computer Seience Department ஐ நோக்கி இனம் புரியா மகிழ்ச்சியுடனும், சொல்லத்தெரியா பதற்றத்துடனும்....

*****************

"ஜோதி" என்னை வாட்டி வதைக்கும் வசீகரப் பெயர்..  பெயருக்கேற்றார்ப்போல எப்போதும் புன்னைகைகளை ஏந்திக் கொண்டிருக்கும் லட்சணமான முகம், நெற்றியில் விழுந்து ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் ஓரிரு முடிக்கற்றைகள், ஒவ்வொரு புன்னகையிலும் என்னை புதைக்கும் கன்னத்தின் குழிகள், பிறை நிலவுக்கு திருஷ்டிப்பொட்டு போல புருவங்களுக்கு சற்று மேலே பதிந்திருக்கும் சந்தனமும், சாந்துப்பொட்டும், அவளின் ஓரப்பார்வையும், சிதறாமல் சிந்தும் புன்னகையும் என்னை தினம் தினம் கொன்று விட்டு போகும்..

கல்லூரியில் படிக்கும் மொத்த பெண்களில் எண்ணிக்கையில் 80 % மலையாளிப் பெண்களாக இருந்தாலும் எனக்கிவள் "ஸ்பெசல்"

*****************


ஜோதியும் நானும் நல்ல நட்புகள் என்பதை அனைவரறிந்தாலும், என்னுள் நான் பூட்டி வைத்திருக்கும் காதலை அவளறிவாள் என்பதை நானறிவேன். ஒரு போதும் நான் வெளிப்படையாக சொன்னதில்லை என்றாலும் அவளின் புன்னகைகள் சொல்லும் என் பிரியத்தை அவள் புரிந்ததை. எதற்கும் அவசரப்படுவதில்லை அவள், இதுவரை கோபப்பட்டும் பார்த்ததில்லை நான், எதைக்கூறினாலும் புன்னகையே அவளின் பதில்.

நிச்சயமாக அடி விழாது என்ற நம்பிக்கையில் நேற்று மதிய இடைவேளைக்கு பின்னர் பேசிக்கொண்டிருக்கையில் அவளிடம் "உன்னை எனக்கு பிடித்திருக்கிறது, என் வாழ்க்கை முழுவதும் நீ துணையாக வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்று சொல்லிவிட்டேன்..

பதிலேதும் வரவில்லை.. எப்போதும் போல புன்னகையை புன்னகையை சிதறவிடாமல் திடீரென எதோ சொல்ல வந்தவள் சொல்லாமல் மௌனம் சாதித்தாள்.

இரண்டு நிமிட மௌனத்திற்கு பின் வாய் திறந்தாள்.. வார்த்தைகள் உதிர்ந்தன..

"எனக்கு கொஞ்சம் டைம் வேணும் ஜெயந்த்.. இது நம்ம வாழ்க்கை எடுத்தோம் கவுத்தொமுன்னு முடிவெடுக்க முடியாது. சோ நான் கொஞ்சம் யோசிக்கணும்" என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் சென்றாள்.. நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. இல்லை என்று சொல்லாமல் யோசிக்கிறேன் என்றாவது சொன்னாளே என்ற சந்தோசத்திலும் நல்ல பதில் தான் வரும் என்ற நம்பிக்கையிலும்...


*****************

இதோ சொல்லியனுப்பியிருக்கிறாள்.. அதற்காகத் தான் இருக்க வேண்டும்.. நிச்சயம் நல்ல முடிவாகத்தான் இருக்க வேண்டும் என்று தெரிந்த, தெரியாத, பெயருள்ள, பெயரில்லாத ஆயிரக்கணக்கான கடவுள்களை மனதிற்குள் வேண்டிக்கொண்டு சென்று கொண்டிருக்கிறேன் அவளின் பதிலை நோக்கி..

இதோ பக்கத்தில் வந்திட்டேன் இப்ப போயிருவேன்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... அடுத்த பதிவு வரைக்கும்.. நல்ல முடிவாத்தான் இருக்கனுமுன்னு கடவுளை வேண்டிக்குங்க எனக்காக..


ஒற்றைச் சருகு...

என்னையணைத்த தனிமையை விட...
இன்று
அவன்..
அவள்..
அது.. போன்ற மாயைகளாலும், மயக்கத்தாலும்
நான் பெற்ற ஏக்கம், ஏமாற்றம், கோவம், அவமானம்
ஆகியவற்றால் கூனிக் குறுகிப்போன என்னை வாரியணைத்த தனிமையை எனக்கு பிடித்திருந்தது...

அகராதி இல்லாத ஆறுதல்..
பேசப்படாத மொழி..
இசைக்கப்படாத இசை...
உருவமில்லாத உறவு...
தனிமையின் உன்னதம் உணர்கிறேன்...

தனிமைப் பொழுதுகளில் மட்டுமே
நான் நானாக இருக்கிறேன்..
அங்கே நான் இழப்பதற்கு ஒன்றுமில்லை..
என் கவலைகளுக்கும் கவலையில்லை..
பாசத்திற்கும் இடமில்லை..
பழகுவதற்கும் எவருமில்லை...

இந்த இருள் பூத்த தனிமையெனும் நந்தவனத்தில்
என்னை சுற்றியும், எனக்கு துணையாகவும் நான் மட்டுமே....
தேட நினைப்பதும் நான் தொலைத்த
என்னை மட்டுமே..

தேடிக்கொண்டிருக்கிறேன்
கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கையில்..

நாங்களும் ஆயுதபூஜை கொண்டாடுவோமில்ல..



நாடு விட்டு நாடு வந்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தாலும் நம் நாட்டு பண்டிகைகளான பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை போன்ற நிகழ்சிகளை கொண்டாடும் போது ஊரில் இருப்பது போன்ற உணர்வு தான் வருகிறது.. மொழி, நாடு என பல்வேறு விசயங்களால் வேறு பட்டிருந்தாலும் இது போன்ற நிகழ்சிகளின் போது ஓன்று சேருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது..


இன்று (16-10-2010) நான் பணிபுரியும் இடத்தில் ஆயுத பூஜை கொண்டாடிய போது எடுத்த புகைப்படங்கள் இவை..
























ஊஞ்சலாடும் என் இறகொன்று..



நான் வெறுத்தொதுக்கிய என் கையெழுத்தை மீண்டுமொருமுறை கிறுக்கிப்பார்க்கும் ஆசையுடனும்.. என்னுள் காணமல் போன என்னை தேடவும்.. அரையாண்டுகள் எழுதாமல் விட்ட பக்கங்களை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு என் பேனா முத்தமிடுகிறது உன்னுடலை...





வாழ்ந்த வாழ்க்கை, வாழும் வாழ்க்கை, படித்த படிப்பு, செய்யும் வேலை என எதுவுமே என் எதிர்பார்ப்பின் படி அமையாவிடினும், எனக்கு கிடைத்த அனைத்தையும் நான் எதிர்பார்த்தவைகளாக மாற்றி வாழ பழகி விட்ட எனக்கு கடந்த சில வாரங்களாக எல்லாமே மாறி வருகிறது.. வலி.. வலி.. வலிகள் மட்டுமே வலிய வந்து என்னுடன் சேருகின்றன.. சாண் ஏறினால் மீட்டர் கணக்கில் சறுக்குகிறது.. அடி மேல் அடி அடுக்கடுக்காய் விழுந்து கொண்டிருக்கிறது.. ஒரு தடவை கீழே வீழ்ந்து எழப்போனால் மீண்டும் தடுக்கி விழுகிறேன்.. சுதாகரித்துக் கொண்டு எழுந்து நிற்க முயற்சிக்கிறேன்.. பின்னாலிருந்து யார் யாரோ காலை தட்டிவிடுகிரார்கள்.. கால்பந்தாட்ட மைதானத்தில மாட்டிக்கொண்ட ஒரு உயிருள்ள பந்து போலாகிவிட்டது என் நிலை..

எல்லாம் ஒவ்வொன்றாய் என்னை விட்டு விலகிப்போவது போன்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.. எது போனாலென்ன உன்னுடன் நானிருக்கிறேன் என்று என்னிலிருந்த என் தன்னம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருவதை உணருகிறேன்.. வாழ்க்கையை வலியோடு கூடி அனுபவித்த எனக்கு, இந்த நாட்கள் ஒரு வித இனம் புரியாத பயத்தையும், வெறுப்பையும் தோன்ற வைக்கிறது.. எதற்க்கெடுத்தாலும் கோவம், ஆத்திரம் என என்னை நானே இழந்து கொண்டிருக்கிறேன்..

என்னை நான்.. நானாக மீட்டுக்கொண்டு வர, கல்லூரி நட்புகள் கிடைக்க துவங்கிய நாட்களில் என் மனம் வெறுத்தொதுக்கிய தனிமை.. எனக்கு தேவைப்படுகிறது..

இப்போதெல்லாம்
எனக்கு துணையாய்
யாருமில்லா தனிமையும்..
என்னறை கும்மிருட்டும் தான்..

நாளை நடக்கவிருப்பதை பற்றி கவலைப்படாமல்... நான் தூங்காத இரவுகளின் எண்ணிக்கையில் இந்த இரவும் சேரக்கூடாதென்ற சிந்தனையில்..

எந்திரனும் நொந்திரனும் பின்ன நானும்...


எந்திரனும் நொந்திரனும்...

150 கோடி பணம் போட்டு படம் எடுத்திருக்காங்களாம்...

ரஜினி நடிசிருக்காராம்....

ஒலக அழகி ஐசு நடிச்சிருக்காங்களாம்...

சங்கரு இயக்கியிருக்காராம்...

இங்கிலீஷ் படத்துக்கு இணையா கிராபிக்ஸ் பண்ணியிருக்காங்களாம்....

எங்கே பாத்தாலும்... எந்த பக்கம் திரும்பினாலும்.... ஒரே பேச்சு எந்திரன் தான்...

அந்த 150 கோடியும் எவன் பணம்? எல்லாம் நம்ம வயித்தில அடிச்சு அவங்க சம்பாதிச்சது தான்... இந்த ஐசு பொண்ணு இன்னும் எத்தன வருசத்துக்கு தான் நான் அழகி..!! நான் தான் அழகி..!!! நான் ஒருத்தி தான் ஒலக அழகி அப்படீன்னு சொல்லிட்டு திரியுமோ... சங்கர சொல்லவே வேண்டாம்... எந்த பிரோடியுசர் கிடப்பான் அவன் தலையில மிளகா அரைக்கலாமுன்னு காத்திருக்கிற ஒரு அறிவாளி..!!
ன்னய்யா பெரிய எந்திரன்... வில் ஸ்மித் நடிச்ச ரோபோட்ஸ் மாதிரி வருமா.... 75 வருஷ சினிமாவுல வராததா இந்த படத்தில வரப்போகுது... தேவையில்லாம வெட்டித்தனமா பேசிக்கிட்டு... எதோ ஒரு புதிய கிரகத்த கண்டுபிடிச்ச மாதிரியில்ல பேசிக்கிறாங்க... நாட்டில எவ்வளவோ பிரச்சனை இருக்கு... ஏன் உங்க வீட்டில ஆயிரத்தெட்டு பிரச்சன இருக்கு... அதையெல்லாம் விட்டுட்டு என்னய்யா சும்மா.. எந்திரன்.. சந்திரனுட்டு.. போங்கையா போய் பொழப்ப பாருங்க... காலங்காலமா நடந்துகிட்டிருக்கிற இந்து முஸ்லிம் சமந்தப்பட்ட அயோத்தி பிரச்சனைக்கு தீர்ப்பு சொன்னாங்க... அதுக்கு கூட யாரும் இந்த அளவு ஆர்வம் காட்டினதா தெரியல... வந்திட்டானுங்க வெட்டிப்பயலுவ... எந்திரன்.. நொந்திரனுன்னு...

ஐயா... அம்மா... ராசா... கோவப்படாதீங்க... ஆத்திரப்பட்டு ஆள காலி பண்ணிராதீங்க.... இதெல்லாம் நான் சொன்னதில்ல... நேத்தைக்கு படத்துக்கு போனப்போ தியேட்டர் வாசல்ல நின்னு ஒரு பன்னாட சொன்னது... அந்த நேரம் அந்த இடத்திலையே அவன போட்டு தள்ளியிருக்கணும்...சூழ்நிலை சரியில்ல.. அதனால தான் கம்முன்னு வந்திட்டேன்....

இந்த மாதிரி ஏதாவது வேலையத்தவனுங்க பேசினா. அவன செருப்பால அடிங்க.... அவன் வீட்டுக்கு சைக்கிள்.. பைக்.. ஆட்டோ.. கார் லாரி... இப்படி பாரபட்சம் பாக்காம அனுப்புங்க... கொய்யால சாகட்டும்... தலைவர் படத்த பற்றி இனிமேல் எவனும் பல்லு மேல நாக்கையோ இல்ல மூக்கையோ போட்டு பேசக்கூடாது....



*************************************
எந்திரனும் நானும்..

ஷ்டப்பட்டு வாங்குன டிக்கெட் கையிலிருக்க.. இருந்த வேலைய சீக்கிரம் முடிச்சிட்டு போலாமுன்னு முட்டி மோதி செஞ்சா... திரும்பவும் கொஞ்சம் பைல்ஸ் எடுத்து வந்து என் முன்னால போட்ட டேமேஜரை அசிங்க அசிங்கமா மனசுக்குள்ள திட்டிட்டு... வேற வழியில்லாம அந்த வேலையும் முடிச்சு... அவசர அவசரமா வீட்டுக்கு வந்து குளிச்சு கிளம்பும் போது டைம் பாத்தா படம் ஆரம்பிக்க இன்னும் 40 நிமிஷம் தான் இருக்கு.. அலறியடிச்சு டாக்ஸி கூப்பிட்டு, டிரைவர் கிட்ட கெஞ்சி கூத்தாடி வண்டிய வேகமா ஓட்ட சொல்லி ஒரு வழியா வந்து சேர்ந்தோம் தியேட்டருக்கு படம் தொடங்குறதுக்கு 10 நிமிஷம் முன்னாடியே....

செம கெத்தா உள்ள போய் நாங்க ரிசர்வ் பண்ணியிருந்த VIP ஸீட்ல போய் உக்காந்தா.. எதோ சாதிச்சது மாதிரியே ஒரு பீல்... தலைவர் படத்த முன்னாடியே பாக்குறதுன்னா சும்மாவா.... அடுத்த 5 நிமிசத்தில படத்த ஆரம்பிச்சிட்டான்... தலைவர் பெயர போடும் போது வந்த விசிலு சத்தம் இருக்கே... அய்யோ இப்ப நினச்சாலும் சும்மா அதிருது... அப்படி ஒரு சத்தம்...


முதல் சீன்ல தலைவர காமிச்சான் பாருங்க அத்தன பேரும் ஸீட்ட விட்டு எழும்பி நின்னு விசிலடிச்சு கை தட்டினாங்க... அப்படி ஒரு மாஸ் நம்ம தலைவருக்கு... தலைவருக்கும் சரி... நம்ம செல்லம் ஐஷுக்கும் சரி எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாத அறிமுகம்... தலைவரும் ஐஷும் ஏன்னா ஒரு ஜோடி பொருத்தம்... வர வர தலைவருக்கு வயசு குறைஞ்சுகிட்டே வருது.... காதல் அணுக்கள் பாட்டுல கையில கிற்றார் எடுத்துகிட்டு நடந்து வருவாரு பாருங்க... அந்த அழகா பாக்க இந்த ரெண்டு கண்ணு பத்தாம பக்கத்தில இருந்தவங்களோட கண்ணையும் கடன் கேக்கலாமான்னு தோணிச்சு. பாட்டுக்கு லோகேசன் தேடி உலகத்தோட மூலைக்கே போனாங்களோன்னு நினைக்கிற அளவுக்கு அவ்வளவு அழகு அந்த இடம்.... காதல் அணுக்கள் பாட்டு எடுத்த லோகேசன் எதுன்னு தெரிஞ்சா சொல்லுங்கப்பு...

டம் தொடக்கி கொஞ்ச நேரத்திலையே ரோபோ ரஜினியையும் காமிச்சிடுறாங்க... படத்தில மொத்தமும் ரோபோ ரஜினியோட அட்டகாசம் தான்... ரோபோ ரஜினி செய்யும் காமெடி.. பைட்...டான்ஸ் எல்லாமே ரொம்ப ரசிக்கும் படியா இருந்திச்சு.... இடைவேளை வரைக்கும் நல்லவனா இருக்கிற ரோபோ ரஜினி... இடைவேளைக்கப்புறம் வில்லனா மாறுறது தான் செம கலக்கல்... மொத்த படத்திலும் வர்ற ப்ரொபசர் ரஜினி... நல்ல ரோபோ ரஜினியையும் விட வில்லன் ரோபோ ரஜினியின் கதாப்பாத்திரம் தான் என்னையும் படம் பார்த்தவர்களையும் ரொம்ப கவர்ந்தது.... வில்லன் ரோபோ பேசும் வசனங்கள்.. முக பாவனை.. நடை.. வில்லத்தனம் என எல்லாமே நல்லாயிருக்கு... வில்லன் ரோபோவின் முகம் மூன்றுமுகம் ரஜினியை ஞாபகப்படுத்தியது...

க்களே.... நீங்க படம் பாருங்க இல்ல பாக்காம போங்க... ஆனா எப்படியாவது கடைசி 45 நிமிஷம் படத்த பாக்க மிஸ் பண்ணாதீங்க... மொத்த படத்துக்கும் செலவு பண்ணின 150 கோடி பணத்தில 100 கோடி இந்த 45 நிமிசத்துக்கு மட்டும் தான் செலவு பண்ணியிருப்பாங்க... அதெயெல்லாம் சும்மா வார்த்தையால சொல்ல முடியாது... கண்ணால பாத்து அனுபபிக்கணும்... அவ்வளவு ஒரு பிரமாண்டம்... என்ன விட்டா தலைவர பற்றியும்... தலைவர் நடிச்ச படத்த பற்றியும் பேசிட்டே இருப்பேன்...

போங்க மக்கா... போங்க.. சும்மா இத படிச்சு நேரத்த வீணடிக்காம தலைவர் படத்துக்கு எங்கையாவது டிக்கெட் கிடைக்குமான்னு போய் தேடுங்க....

**************
அதிமுக்கிய குறிப்பு....

நேத்தைக்கு எந்திரன் படத்துக்கு போன எங்க 9 பேருக்கு ஆனா செலவு இந்தியா காசுக்கு மொத்தம் வெறும் 18,000 /- தான்... இதில டிக்கெட் மட்டும் 9 பேருக்கு வெறும் பத்தாயிரம் தான்... மீதி எட்டாயிரம் டாக்ஸி.. சாப்பாடு... அப்படீன்னு ஆகிப்போச்சு... இதெயெல்லாம் கணக்கு பாத்தா தலைவர் படத்த முதல் நாளு பாக்க முடியுமா.... இல்ல இப்படி பதிவு தான் எழுத முடியுமா....

காசு இன்னைக்கு போனா நாளைக்கு வரும்.. ஆனா தலைவர் படம்..???