கிழிக்கப்பட்ட பக்கங்கள் - என் டைரியிலிருந்து



 April-02-2011
எண்ணங்களிலும் எழுத்துக்களிலும் உன்னை மட்டுமே நினைக்க வைத்து நீ என்னை ம(று)றந்து போன பின்னரும் என் உடம்பிலுள்ள எண்ணிலடங்கா செல்களில் ஓரிரு செல்களிலாவது உந்தன் நினைவுகள் நிழல் போல ஒட்டியிருப்பதால் உன்னை ஒரேடியாக ஒதுக்கித்தள்ள முடியாமலும், அதே சமயம் ஒட்டி உறவாடவும் முடியாமல் என் விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம் என எல்லாவற்றையும் இங்கே ஒரு ஓரமாக கொட்டி வைக்கிறேன்.  என்றேனும் ஒரு நாள் உன் கண்ணில் பட்டு என் எழுத்துக்கள் உயிர்த்தெழும்  அல்லது மோட்சம் அடையும் என்ற நம்பிக்கையில்....

உனக்காக கடிதம் எழுதும் முயற்ச்சியில்  வெற்றுக் காகிதங்களுடன் போட்டியிட்டு ஒரு புள்ளி கூட வைக்காமல் தோல்வியுடனே திரும்பத் துவங்கி நாட்கள் நூறு தன்னை மாய்த்துக் கொண்டு விட்டன. எனக்கு எழுத கற்றுக்கொடுத்தவள் நீ, உன்னை பற்றி எழுதுவதென்றால் எப்போதும் போல ஏதாவது சும்மா கிறுக்கி வைத்து விட முடியுமா என்ன !!!

உனக்கும் எனக்குமான அறிமுகத்தை நான் இங்கே சொல்லி தான் நீ அறிய வேண்டுமென்றில்லை. உன்னை காதலிக்க வழியில்லாமல் போனதால் உன்னை எனக்கு அறிமுகம் செய்த எழுத்துக்களை காதலிக்க கற்றுக்கொண்டுவிட்டேன். அவற்றை நான் வெறுத்தொதுக்கினாலன்று என்னை தனிமையில்  விட்டு சென்று விடாது.  இப்போதெல்லாம் என்னுடன் நீயில்லாத குறையை இவ்வெழுத்துக்கள் தான் ஓரந்தள்ளி ஒழித்து வைக்கின்றன. ஆனாலும் நான் உன்னை நினைப்பதற்கு மறப்பதில்லை.

மறந்தால் தானே உன்னை நினைப்பதற்கு நான் செய்யும் ஒவ்வொரு செயல்கும் உன்னை தான் நினைவூட்டிக் கொண்டே தான் இருக்கின்றன. இப்போது என்னிடம் இருப்பவையெல்லாம் உன்னுடையவை தான். ஒவ்வொன்றும் உன்னிடமிருந்து கற்றுக்கொண்டது தான். உனக்கு தெரியுமா என்று தெரியவில்லை. வீட்டில் நான் இப்போது  மிகவும் நல்ல பிள்ளையாகிவிட்டேன்.  என்னில் நிறைய மாற்றம் இருக்கிறது என்கிறார்கள், பெரியவர்களை மதித்து நடந்து கொள்கிறேனாம்யாரிடமும் எதிர்த்து பேசுவதில்லையாம், வீட்டு நிர்வாகங்களை கூட நான் நன்றாக பார்த்து கொள்கிறேனாம், என்னை மெச்சுகிறார்கள் பெற்றோர்கள். அவர்கள் இதை சொல்லும் போதெல்லாம் என்னிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே வெளிப்படுகிறது.  கொஞ்சம் கொஞ்சமாய் வார்த்தைகளால் வடிவமைத்து என்னுள் பல மாற்றங்கள் செய்த உனக்கல்லவா இந்த பாராட்டுகள் சேர வேண்டும். 

ஒரு தாயின் பொறுமை உனக்கு. இல்லையென்றால் யாருக்குமே உதவாமல் இருந்த இந்த களிமண்ணை பக்குவமாய் பிடித்து ஒரு சிலையாக்கியிருக்க முடியமா..  இந்த களிமண்ணிலும் காதல் கனியச் செய்தவள் நீ. கவிதைகள் கற்று தந்தாய். கவிதையினூடே காதலிக்கவும் கற்று தந்தாய்.

நீ என்னிடம்  காதலை கூறிய நாள் உனக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்கு நினைவிருக்கிறது. இந்த சொல்லை கேட்ப்பதற்க்காகத் தானா நான் பிறந்தேன் என்று நினைத்து கொண்ட அக்கணம் என்னுடல் இவ்வுலகம் விட்டு பிரியும் வரை மறவாது கண்மணி. ஈரம் வேண்டி வெகுநாள் காத்திருந்த மண் பெய்யும் மழைத்துளிகளை உள்வாங்கிக்கொள்வது போல உன் வாயிலிருந்து உதிர்ந்த அந்த வார்த்தைகளை உள்வாங்கி பத்திரப்படுத்தி வைத்துக்கொன்டது உன்னைத்தவிர எவரும் நுழைய முடியாத என் இதயக் கருவறை.

ஒவ்வொரு ஆணும் காதலிடமும் காதலியிடமும் கோழைகள் தான் என்பதை அக்கணம் நானறிந்து கொண்டேன். என்றேனும் உள்ளத்தில் உள்ளதை உள்ள படி சொல்வாயா என்று ஏங்கியிருந்த நாட்களில் எல்லாம் என்னை மெலும் ஏங்க வைத்தாய், ஒரு வழியாய் தைரியத்தை தத்தெடுத்து உன்னிடம்  இன்று சொல்லியே ஆக வேன்டும் என்று வந்த நாளில் என்னையும் முந்திக்கொன்டு நீ காதலை முன் மொழிந்த  அந்த கணத்தில் என் இதயத்துடிப்பின் வேகத்தையும், நான் சொல்ல வந்ததை நீ சொல்லிவிட்டபடியால் என்ன சொல்வதென்று அறியாமல் தடுமாறிப் போய் குளறியபடி வார்த்தைகளை மறந்த என் நாவையும் இன்று நினைத்தாலும் மனதிற்க்குள் எதோ இனம் புரியாத உணர்வு ஒன்று என்னை உருக்குலைக்கிறது.  

அந்நாள் வரை காதல் கவிதைகள் கண்டால் "இதை எழுதியவன் நிச்சயமாக ஒரு பைத்தியமாகத் தானிருப்பான் என்று சொல்லி வந்த என்னுள்ளம் கவிதைக்காக வையகமெங்கும் வார்த்தைகளை தேடியலைந்து சேகரிக்கத் துவங்கியதையும் நான் உண்ர்தேன். சில நாட்களில் உனக்கான கவிதைகளுக்கு தமிழில் வார்த்தைகள் போதாது என்பதையும் தெரிந்து கொன்டேன். ஒருவனை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது காதல்.
ஆணை பெண்ணாக்கும் வித்தை காதலுக்கு மட்டுமே தெரியும் என்று நினைக்கிறென். ஆம்.. பல தடவை காதல் முன்னும் அவள் கண்கள் முன்னும் நான் ஒரு ஆண் என்பதை மறந்திருக்கிறேன். ஆண்மைக்குள்ளும் அச்சம் மடம், நாணம் என எல்லா குணங்களும்    ஒருவருமறியாமல் ஏன் நானே கூட அறியாமல் ஒளிந்திருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டேன். ஆனால் அது நான் உன் கண்பார்த்து பேசும் தருணங்களில் மட்டும் தான் தலைகாட்டி என்னை தடுமாற வைக்கிறது.  

பள்ளிக்கு முன்னும், கோவில் வாசலிலும், காலேஜ் பஸ் ஸ்டாப்களிலும் பிச்சைக்காரர்களுக்கு போட்டியாய் நிற்ப்பது காதல் எனும் பேய் பிடித்து பிசாசுகளுக்காக காத்திருக்கும் பெண் பித்தர்களாக தான் இருக்கும் என்று நண்பர்களிடம் சொல்லி சிரிக்கும் போது எனக்கு தெரிந்திருக்கவில்லை இப்படி உனக்காக நானும் ஒரு நாள் கோவில் வாசலிலும், பஸ் ஸ்டாப்பிலும் உனக்காக காத்திருக்க போகிறேன் என்று. ஆனால் நான் ஒரு பிசாசுக்காக காத்திருக்கவில்லை, தேவதைகளும் பொறாமை கொள்ளுமளவு அழகுடைய தேவதைக்காக காத்திருந்தேன், ஒரு பெண் பித்தனாக காத்திருக்கவில்லை. ஒற்றை பார்வையில் சித்தம் கலங்க செய்து இனி என் வாழ்வின் மொத்தமும் அவள் தான் என்று நினைக்க வைத்த என் தேவைதையின் ஒரு பக்தனாக காத்திருந்தேன். 

அரை மணி நேரம் தாமதனாய் வந்த நண்பன் அதற்கு எவ்வளவோ காரணங்கள் சொல்லியும் சமாதானமாகாமல் கோபித்துக்கொண்ட நான், காலையில் வருவாய் என்று உனக்காக காத்திருந்த ஒரு நாள் அரை நாள் தாமதமாய் வந்த உன்னிடம் அதிர்ந்து கூட பேசாமல் அடங்கிப்போனதன் அர்த்தம் தான் காதல் என்று அழகாக அழுத்தி சொன்னது என்னுள்ளம்.

உன் வருகைக்காக நான் காத்திருக்கும் தருணங்களில் என்னை பற்றிக்கொள்ளும் தனிமையை துரத்திவிட்டு உன் நினைவுகள் வந்து ஒட்டிக்கொள்ளும். ஒட்டிக்கொண்ட நினைவுகள் ஒரு ஓரமாய் ஒதுங்கி நிற்காமல் என்னுள் நான் ஒழித்து வைத்திருக்கும் வார்த்தைகளை ஓன்று சேர்த்து உன்னை பற்றி எழுதத் துவங்கும். உன்னை பற்றி என்ன எழுதினாலும் அவை கவிதையாகவே உருமாறிவிடுகின்றன.



"காத்திருப்புகள் வலியைத்தான் தருமாம், 
உனக்கான காத்திருப்புகளனைத்தும்  
எனக்கு 
கவிதைகளை மட்டுமே தருகின்றன".


என்றேனும் ஒரு நாள் உன் கண்ணில் பட்டு என் எழுத்துக்கள் உயிர்த்தெழும்  அல்லது மோட்சம் அடையும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்...


கவிதை தேவதைக்கானது..




நேற்றைய பொழுதில் எழுதி முடித்த கவிதையை செப்பனிட நேரம் கொஞ்சமதிகமானதால் நள்ளிரவு தாண்டி நித்திரைதேவியின் மடியில் முகம் புதைத்து கனவில் காலடியெடுத்து வைத்த அடுத்த கணத்தில் ஏனித்தனை தாமதமென்று கண்களில் கோபம் கொப்பளிக்க என் முன்னால் வந்து குதித்தாள் என் கனவு தேவதை,

கெஞ்சியும், கொஞ்சியும் பார்த்த பின்னரும் சினம் தணியா தேவதையின் கண்களின் கருவிழி நிறமும், கடைவாய்ப்பற்களும் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறுவதை கவனித்தேன், இன்னும் தாமதமானால் தேவதையவள் ரட்ஷஸாக உருமாறி விடுவாள் என்பது ஏற்கனவே நானறிந்த விசயமானதால் தாமதிக்காமல் என் வலக்கரம் கொண்டு சிரம் பற்றி, இடக்கரம் கொண்டு இடை பற்றி அவளிதழொற்றி உயிருஞ்ச, ரட்ஷஸ் காணமல் போக தேவதையானவள் வெட்கமுடுத்தி விலகி நின்றாள் கனவுகலத்தையும் மறந்து,

தேவதை  தேவதையாகத்தான் இருக்கிறாள் என்று உறுதியானப்பின் உனக்காய் கவிதையொன்றை எழுதி எடுத்து வைத்திருக்கிறேனென்றேன், மெல்லிடை அசைத்து கவிதையாய் நடந்து என்னருகில் வந்து என் கிறுக்கலை (அவள் முன் அவளைத்தவிர வேறேதும் கவிதையென கொள்ளப்படாது) கையிலேந்தி, என் கண்களுக்கு முன் அவள் வேல்விழிகளை நிறுத்தி "பொழுது புலர இன்னும் ஒரு நாழிகையே இருக்கிறது நானிப்போது செல்கிறேன் நாளைய கனவில் உனக்கான கவிதையுடன் மீண்டும் வருகிறேன் என்று கூறி என் நெற்றியில் முத்தம் பதித்த அடுத்த கணம் என் காது கிழித்த அலறல சத்தம் கேட்டு திடுக்கிட்டு கண்விழித்தேன் நான், எமனாய் என்னருகில் அலாரம் என்ற பெயரில் அலறிக்கொண்டிருந்தது என் அலைபேசி.

இன்றும்  வரலாம் என் தேவதை எனது அல்லது எனக்கான கவிதையுடன்.. 


# படம் இணையத்திலிருந்து